வியாழன், 1 செப்டம்பர், 2016

அந்த காலை நேரத்தில் வழக்கம் போலத்தான் விசைத்தறிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். காலை உணவு நேரம். வழியில் எதிர்ப்பட்ட தொழிலாளி ஒருவர் ‘ஒங்கூட்டுக்கு ஒறம்பர வந்திருக்குறாங்க...’ என்று போகிற போக்கில் ஒரு தகவலாய் சொல்லி விட்டுச் சென்றார். எனக்கு மனதுக்குள் சின்ன சிரிப்பு எழுந்தது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கும், மனைவிக்கும் உற்றார் உறவினர்கள் ஊரில் இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட எங்களைத் தேடித்தான் அவர்கள் யாரும் வருவதில்லை. எனவே, வீட்டுக்கு தோழர்கள் யாராவது தேடி வந்திருப்பார்கள் என்றுதான் நினைத்தபடி நடந்தேன்.

ஆனால், தோழர் தமிழரசன் தேடி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அதற்கு முன், அவர் அப்படி வந்தவர் அல்ல. மேலும், அவர் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து வெளியேறி  தமிழ்  தேசிய இனப் போராட்டத்தை முன்னிறுத்தி தனி அமைப்பு கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. நான் மக்கள் யுத்தக் குழுவில் முரண்பட்டு வெளியேறும் எண்ணத்துடன் இருந்தேன். இந்த சமயத்தில் தான் தோழர் அதை யார் மூலமாகவோ தெரிந்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்திருந்தார். தோழரை மக்கள் யுத்தத்தில் இருந்த சமயத்தில் ஓரிருமுறை   சந்தித்து இருக்கிறேன். 

என்றாலும், நெருக்கமான பழக்கமில்லை. ஏனெனில், நானும், தோழரும் வெவ்வேறு மாவட்டங்கள் என்பதால், நெருங்கிப் பழக வாய்ப்பில்லை. 

நான் வீட்டை அண்மித்த தருணம். தோழர் சட்டையை கழட்டி வைத்து விட்டு, வீட்டு வாசலில் மண்டிக் கிடந்த புற்களை அகற்றிக் கொண்டிருந்தார். எனவே, என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. ஆனால், வந்திருப்பது யார்? என்று தெரிந்ததும் ஆச்சரியம் தாளவில்லை. ‘தோழர்..’ என்று நான் அழைத்ததும் நிமிர்ந்துப் பார்த்து சிரித்தார்.  ‘எப்ப வந்தீங்க?’ என்று கேட்டதற்கு ‘ஏழு மணிக்கே வந்துட்டேன் தோழர். அத வுடுங்க... வூட்டு வாசலை ஏன் இப்படி வச்சிருக்கீங்க?’ என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர் வேலை துவங்கப் போக, நான் தடுத்தேன். 

பிறகு, மனைவியிடம் ‘எதுக்கும்மா... தோழரை இந்த வேலையெல்லாம் செய்ய விட்டே?’ என்று கேட்டு முடிப்பதற்குள் ‘நா என்ன விருந்தாளியா? தோழர்’ என்று மேலே பேச விடாமல் தடுத்தார் தமிழரசன். பொதுவாகவே நக்சல்பாரி தோழர்கள் சக தோழர்கள் வீட்டுக்குச் சென்றால், தங்கள் சட்டையை கழட்டி விட்டு ஒரு துண்டை போர்த்திக் கொண்டு மண் தரையாக இருந்தாலும், சகஜமாய் உட்கார்ந்து விடுவார்கள். வெளியிலிருந்து யார் வந்தாலும் வந்திருப்பவர் வெளியூர்காரர் என்ற தோரணையை தவிர்க்கவே இந்த நடைமுறை. 

அதே சமயம், தோழர்களின் இந்த இயல்பான நடவடிக்கை அவர்கள் தோழர்கள் தான் என்பதை வீட்டில் இருப்பவர்களுக்கு தெளிவாய் தெரிவித்து விடும். சில சமயம், உளவுத்துறை ஆட்கள் தோழர்கள் என்ற போர்வையில் ஆண்கள் யாருமில்லாத நேரத்தில் தங்களை தோழர்களாய் கூறிக் கொண்டு பெண்களிடம் யார்,யாரெல்லாம் வீட்டுக்கு வருகிறார்கள். தோழர் இப்போது என்ன  இயக்கப் பணி செய்கிறார்? என்பதையெல்லாம் நைசாகப் பேசி தெரிந்துக் கொள்ள முயல்வார்கள். ஆனால், அவர்கள் யார்? என்பதை  பட்டும் படாமல் இருக்கும் நடவடிக்கையால் பெண்களுக்கு மட்டுமல்ல அக்கம் பக்கத்து ஆட்களுக்கும்  தெளிவாக தெரிந்து விடும். 

தோழர் தமிழரசன் இன்னும் எளிமையானவர். இல்லையென்றால், தன் சொந்த வீடு போல, என் வீட்டு வாசலில் மண்டிக் கிடக்கும் புற்களை செதுக்க 
முனைவாரா? அடுத்த மூன்று நாட்கள் தோழர் தங்கியிருந்தார். பல்வேறு அரசியல் விடயங்கள் பேசினோம். சில கருத்து முரண்பாடுகள் நீடித்தன. மீண்டும் தோழரை சந்திப்போம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், எதிரிகள் அவரை வெகு சீக்கிரம் கொன்று விட்டார்கள். அவர் இறப்புச் செய்தியை நான் என் மனைவியிடமும், அந்த சில நாட்களில் அவருடன் ஐக்கியப்பட்டிருந்த அருகாமை வீட்டாரிடம் சொன்னேன். ஏதோ அவர்கள் தங்களில் ஒருவரை இழந்து விட்டதாய் துக்கப்பட்டார்கள்.

2 கருத்துகள்:

  1. தோழர் தமிழரசனை பற்றிய முழு விபரங்கள் தெறிந்துக்கொள்ள அல்லது அவரது வாழ்க்கை வரலாற்றை தெறிந்துக்கொள்ள ஏதேனும் நூல்கள் இருக்கிறதா தோழர்.

    பதிலளிநீக்கு