வியாழன், 27 அக்டோபர், 2016

நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மோடியின் கொடும்பாவி எரித்தும் போராடிய நமது தோழர்கள் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் சிறைவாசம் அனுபவித்து பிணையில் வெளி வந்திருக்கிறார்கள். அவர்களில், தமிழ்த்தேசமக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரான தோழர் செந்தமிழ்குமரனுக்கு வாழ்த்து தெரிவித்த போது அவர் சில சுவாரஸ்யமான சிறைச் சம்பவங்களை என்னிடம் கூறினார். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

தோழர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு செங்கல்பட்டு கிளை சிறைக்குள் நுழைந்ததுமே சிறை அதிகாரிகள் அவர்களிடம் கெடுபிடி காட்டியிருக்கிறார்கள். அப்போது தோழர்கள் அதை வன்மையாக கண்டித்திருக்கிறார்கள். சட்டென சிறை அதிகாரி ஒருவர் அதிர்ந்து போய் ‘நீங்கள் என்ன நக்சலைட்டா? தமிழ்நாடு விடுதலைப் படையா?’என விசாரித்திருக்கிறார். பிறகு, தோழர்கள் சிறை அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவரான தோழர் சதுரைப் பிரபாகரன் ‘என்ன தோழர் நக்சலைட்டா? என கேட்கிறார்கள். சிறை அதிகாரிகளுக்கு நக்சல்பாரிகள் என்றால் அவ்வளவு பயமா?” என வினவியிருக்கிறார்.

அதற்கு தோழர் செந்தமிழ்குமரன் “ஆமாம் தோழரே, நக்சல்பாரிகள் சிறைகளில் நடத்திய போராட்டங்கள் ஏராளம். குறிப்பாய், புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் போன்றவர்கள் சிறைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே நக்சல்பாரி தோழர்கள் பலரும் போராடியிருக்கிறார்கள். மேலும், தோழர் பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்...’ நாவலில் சில சிறைப் போராட்டங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன” என விளக்கியிருக்கிறார்.

உடனே ஆர்வமான சதுரை பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் “அப்படியா, தறியுடன் நாவல் படிக்க வேண்டுமே” என கேட்டிருக்கிறார்கள். அதற்கு தகுந்தாற் போல தோழர்களுக்கு பிணைக் கிடைக்க கால தாமதம் ஆகியிருக்கிறது. இந்த சமயத்தில் தோழர்களை மனுப் பார்க்க வந்தவர்களிடம் தறியுடன் உள்ளிட்ட சில புத்தகங்களை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ள அவர்களும் மறுநாளே, அவற்றை சிறைத் தோழர்களிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள். அங்கே, தறியுடன் நாவல் படிக்கப்பட்டு அதன் மீதான விவாதமும் நடந்திருக்கிறது.

தமது முன்னோடிகள் செய்த விலை மதிக்க முடியாத வீரஞ்செறிந்த போராட்டங்களால் தான் சிறையில் நமக்கு மரியாதை தரப்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்ட தோழர்கள், தறியுடன் நாவலில் வருவது போலவே சிறைப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என உறுதி பூண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஒருநாள் சிறையில் கஞ்சா பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக் கொண்டு சிறை நிர்வாகம் அனைத்துக் கைதிகளுக்கும் தண்டனையாக கொசுவர்த்தியை தடை செய்திருக்கிறது. அவ்வளவுதான், தோழர்கள் மற்ற கைதிகளை ஒருங்கிணைத்து தவறு செய்யாதவர்களுக்கு ஏனிந்த தண்டனை? என குரல் கொடுக்க, மேலதிகாரிகள் வந்து அவர்களது போராட்டத்திற்கு செவி மடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, கொசுவர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு சில கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒரு போராட்டம் வெற்றியடைய தோழர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

சிறையில் போராட்டக்களத்திற்கு ‘தறியுடன்...’ நாவல் காரணமாய் விளைந்ததை தோழர்கள் கூறிய போது மிக மனநிறைவாய் உணர்ந்தேன். நாவல் எழுதப்பட்ட நோக்கம் அடக்குமுறைக்கு எதிராய் போராடத் தூண்டுவதுதான். இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக படைக்கப்படுவதல்ல, அது மக்களுக்கானது...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

செப்டம்பர்- 12 தியாகிகள் நினைவு தினம்.

தமிழக நக்சல்பாரி இயக்க வரலாற்றில் தங்கள் இன்னுயிரை ஈந்து மக்கள் பணியாற்றிய தோழர்கள் பலரையும் நினைவு கூறவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. தோழர் எல்.அப்பு கோவை நகரின் கோட்டைமேடு பகுதியைப் பூர்வீகமாய் கொண்டவர். அவரது இயற்பெயர் அற்புதம். தந்தையாரின் பெயர் லியோ.  அற்புதம் என்ற பெயர் பிறகு எல்.அப்புவாய் மாறியது. தனது சமூக வாழ்வின் தொடக்கத்தில்  தோழர் ராவுண்ணியுடன் இணைந்து   பத்திரிக்கை தொடங்கிய நிலையில் இந்திய பொதுவுடமைக் கட்சி [மார்க்சிஸ்ட்] அமைப்பில் இணைந்த அவர்.  அதன் நாளிதழான ‘தீக்கதிர்’ பத்திரிக்கையின் முதல் ஆசிரியராவார். பின்பு, அகில இந்திய அளவில் அந்த அமைப்போடு கொள்கை ரீதியாய் முரண்பட்டு தோழர் சாருமஜீம்தார் தலைமையிலான புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்தார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் நக்சல்பாரி  கிராமத்தில் உருவான உழவர் போராட்டத்தின் காரணமாய்  சாருமஜீம்தார், கனுசன்யால், ஜங்கர் சந்தால் ஆகியோருடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்] அமைப்பு உருவாக காரணமாய் இருந்தார்.

அந்த கட்சியே பின்னாளில் நக்சல்பாரிக் கட்சியென அழைக்கப்பட்டது. நக்சல்பாரி கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் வெகுண்டெழுந்த உழவர் போராட்டத்தை அன்றைய செஞ்சீனத்தின் தமிழ்  வானொலி ஒலிப்பரப்பு‘வசந்தத்தின் இடி முழக்கம்’ என்று வர்ணித்தது.

நக்சல்பாரி அமைப்பு தொடக்கத்தில் அழித்தொழிப்புக் கொள்கை என்ற வழிமுறையை தனது நடைமுறை தந்திரமாய் பின்பற்றியது. அதன் விளைவாய் தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கொடிய நிலவுடமையாளர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்த வீரஞ்செறிந்த உழவர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை உருவாக்கியது. தோழர் எல்.அப்பு பல்வேறு அழித்தொழிப்பு நடவடிக்கையால் போலீசால் தேடப்பட்டு வந்தார். ஆயினும், அவர் தனது தலைமறைவு காலத்திலும் கூட வீதி நாடக கலை வடிவத்தைக் கையிலெடுத்து தான் அதில், பண்ணையாராக நடித்தார். அதனாலேயே அவர் கூலி விவசாயிகள் மத்தியில் பண்ணையார் தோழர் என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

1970களில் வேலூரில் ஒரு தங்கும் விடுதியில் இருந்து அவரை போலீசார் பிடித்துச் சென்றனர். இன்று வரையிலும் அவரை என்ன செய்தார்கள்? என்பது மர்மமாகவே உள்ளது. அழித்தொழிப்புப் பாதையின் தளகர்த்தாவாய் இருந்த எல்.அப்பு. நக்சல்பாரி வரலாற்றில் தமிழக நாயகனாவார்.

தோழர் பாலன். தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்ஸி பட்டம் பெற்றவர். அவர் நக்சல்பாரி வழிமுறையால் ஈர்க்கப்பட்டு, தனது புரட்சிகர வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தார். முதலில், மிக கொடுமையான கந்து வட்டிக்காரன் நல்லம்பள்ளி பெரியண்ண செட்டியை மற்ற தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழித்தார். அதில், அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தன் தண்டனைக் காலம் முடிந்து சேலம் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, தோழர் பாலன் சற்றும் சோர்வில்லாமல் அநீதிகளுக்கு எதிராய் மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்கிறார்.

அந்த நேரம் தோழர் சாருமஜீம்தாருக்குப் பின்னால், நக்சல்பாரி இயக்கம் பிளவுண்டிருந்தது. கூட்டக்குழு என்ற பெயரில் தோழர்கள் தமிழ்வாணன், ஏலகிரி இராமன், தமிழரசன் போன்றவர்கள் ஒரு பிரிவாய் இயங்கி வந்தார்கள். அதுவே பின்னாளில் ஆந்திரத்துடன் இணைந்து மக்கள் யுத்தக் குழுவாய் மாறியது.  அவர்களின் வழி காட்டுதலை ஏற்று மக்கள் யுத்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் தோழர் பாலன். அவரது போராட்ட வழி முறைகள் ஆதிக்க பண்ணைகளை நடுங்க வைத்தன. சாதிவெறியர்கள் பதைத்தார்கள். இதன் விளைவாய் அரசு அவர்களைப் பாதுக்காக்க வால்டர் தேவாரம் என்பவரை வடாற்காடு மற்றும் சேலம் தர்மபுரி டி.ஐ.ஜி யாக நியமித்தது.

திருப்பத்தூரில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்தை சாக்காக வைத்து தேவாரம் ‘நக்சலைட்டுகளை’ ஒடுக்குவதாய் கூறி, புரட்சியாளர்களை அழித்தொழிக்க தொடங்கினான். அவனது நரவேட்டைக்கு முதல் பலி தோழர் பாலன். 1980 செப்டம்பர் 9 ந்தேதி இரவு  தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் அருகிலுள்ள சீரியம்பட்டி என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாலனையும் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட தோழர்களையும் பெரும் படையுடன் வந்து கைது செய்கிறான் தேவாரம். தோழர் பாலன் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பாலக்கோடு காவல் நிலையம் கொண்டு செல்லப்படுகிறார். அங்கே, கடுமையான போலீஸ் சித்ரவதையில் அவரது கால் முறிக்கப்படுகிறது.

அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் குற்றுயிரும்,குலையுயிருமாய் கொண்டு வந்து சேர்க்கிறது போலீஸ். அவர் இறந்து விடுவார் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தோழர் பாலன் மேல் மரியாதை உடைய மருத்துவர்கள் அவரை குணமாக்க முயல, கோபம் கொண்ட தேவாரம் வலுக்கட்டாயமாய் பாலனை சென்னைக்கு தூக்கிச் செல்கிறார். வழியிலேயே போலீஸ் வேனில் சித்ரவதை தொடர்கிறது. சென்னை அரசு மருத்துவமனைக்கு பாலன் கொண்டு வரப்பட, அங்கேயும் சில மனிதாபிமானமுள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முயல, அவர்கள் தேவாரத்தால் மிரட்டி தடுக்கப்படுகிறார்கள். சாகும் தறுவாயில் தனக்கு மருத்துவம் பார்க்க முயன்ற அந்த டாக்டரை அருகில் அழைத்து ‘நீங்கள் கிருத்துவரா?’ எனக் கேட்டு ‘இந்த உலகத்தை மீட்க வந்த இயேசு நாங்கள் தான். நக்சல்பாரி பாதையில் இந்த நாடு வறுமையில் இருந்து ஒருநாள் மீளும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்க’ என்று கூறி இறந்திருக்கிறார் தோழர் பாலன்.

மருத்துவமனையில் பலரும் அழுதிருக்கிறார்கள். அதன் பின், போலீஸ் தோழர் பாலனின் உடலைக் கூட அவரது பெற்றோரிடத்தில் ஒப்படைக்கவில்லை. வெறும் சாம்பலைத்தான் தருகிறார்கள். தோழர் பாலன் இறந்ததை கேள்விப்பட்டு சிறையில் இருந்த தோழர் தமிழரசன் கலங்கியிருக்கிறார். எதற்குமே கலங்காத அவர் மனம் ‘தன்னலமில்லாத புரட்சியாளன் தோழர் பாலனை  இழந்து விட்டோமே’ என கசிந்துருகி இருக்கிறது.

உழைக்கும் மக்களின் அன்புக்குரிய தோழர் பாலன் இறந்தது செப்டம்பர் - 12 நாள். அவரது நினைவாய் தான் அனைத்து\நக்சல்பாரி தியாகிகளுக்கும் நினைவு தினம் அந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது. தோழர்கள் இருவருக்கும் தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில், நாய்க்கன் கொட்டாயில் 1984 ல் சிலை நிறுவப்பட்டது.

என்னுடைய ‘தறியுடன்...’ நாவலில் தோழர் பாலன் பற்றியும், அப்பு -பாலன் சிலை திறப்பு விழாவில் நேரடியாய் கலந்துக் கொண்டவன் என்ற முறையில் அந்த மாபெரும் நிகழ்வை பற்றியும்,  இன்னும் விரிவாய் எழுதியுள்ளேன். தோழர் பாலனுக்கு நாவலை சமர்ப்பித்திருக்கிறேன்..

‘எல்.அப்புடா... எங்கள் தலைவரடா...
ஹேய்... எல்.அப்புடா... எங்கள் தலைவரடா...’

‘அணையாத தீபமானாய் தோழா...
எங்கள் பாலா...’

வியாழன், 1 செப்டம்பர், 2016


அந்த காலை நேரத்தில் வழக்கம் போலத்தான் விசைத்தறிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். காலை உணவு நேரம். வழியில் எதிர்ப்பட்ட தொழிலாளி ஒருவர் ‘ஒங்கூட்டுக்கு ஒறம்பர வந்திருக்குறாங்க...’ என்று போகிற போக்கில் ஒரு தகவலாய் சொல்லி விட்டுச் சென்றார். எனக்கு மனதுக்குள் சின்ன சிரிப்பு எழுந்தது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கும், மனைவிக்கும் உற்றார் உறவினர்கள் ஊரில் இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட எங்களைத் தேடித்தான் அவர்கள் யாரும் வருவதில்லை. எனவே, வீட்டுக்கு தோழர்கள் யாராவது தேடி வந்திருப்பார்கள் என்றுதான் நினைத்தபடி நடந்தேன்.

ஆனால், தோழர் தமிழரசன் தேடி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அதற்கு முன், அவர் அப்படி வந்தவர் அல்ல. மேலும், அவர் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து வெளியேறி  தமிழ்  தேசிய இனப் போராட்டத்தை முன்னிறுத்தி தனி அமைப்பு கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. நான் மக்கள் யுத்தக் குழுவில் முரண்பட்டு வெளியேறும் எண்ணத்துடன் இருந்தேன். இந்த சமயத்தில் தான் தோழர் அதை யார் மூலமாகவோ தெரிந்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்திருந்தார். தோழரை மக்கள் யுத்தத்தில் இருந்த சமயத்தில் ஓரிருமுறை   சந்தித்து இருக்கிறேன். 

என்றாலும், நெருக்கமான பழக்கமில்லை. ஏனெனில், நானும், தோழரும் வெவ்வேறு மாவட்டங்கள் என்பதால், நெருங்கிப் பழக வாய்ப்பில்லை. 

நான் வீட்டை அண்மித்த தருணம். தோழர் சட்டையை கழட்டி வைத்து விட்டு, வீட்டு வாசலில் மண்டிக் கிடந்த புற்களை அகற்றிக் கொண்டிருந்தார். எனவே, என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. ஆனால், வந்திருப்பது யார்? என்று தெரிந்ததும் ஆச்சரியம் தாளவில்லை. ‘தோழர்..’ என்று நான் அழைத்ததும் நிமிர்ந்துப் பார்த்து சிரித்தார்.  ‘எப்ப வந்தீங்க?’ என்று கேட்டதற்கு ‘ஏழு மணிக்கே வந்துட்டேன் தோழர். அத வுடுங்க... வூட்டு வாசலை ஏன் இப்படி வச்சிருக்கீங்க?’ என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர் வேலை துவங்கப் போக, நான் தடுத்தேன். 

பிறகு, மனைவியிடம் ‘எதுக்கும்மா... தோழரை இந்த வேலையெல்லாம் செய்ய விட்டே?’ என்று கேட்டு முடிப்பதற்குள் ‘நா என்ன விருந்தாளியா? தோழர்’ என்று மேலே பேச விடாமல் தடுத்தார் தமிழரசன். பொதுவாகவே நக்சல்பாரி தோழர்கள் சக தோழர்கள் வீட்டுக்குச் சென்றால், தங்கள் சட்டையை கழட்டி விட்டு ஒரு துண்டை போர்த்திக் கொண்டு மண் தரையாக இருந்தாலும், சகஜமாய் உட்கார்ந்து விடுவார்கள். வெளியிலிருந்து யார் வந்தாலும் வந்திருப்பவர் வெளியூர்காரர் என்ற தோரணையை தவிர்க்கவே இந்த நடைமுறை. 

அதே சமயம், தோழர்களின் இந்த இயல்பான நடவடிக்கை அவர்கள் தோழர்கள் தான் என்பதை வீட்டில் இருப்பவர்களுக்கு தெளிவாய் தெரிவித்து விடும். சில சமயம், உளவுத்துறை ஆட்கள் தோழர்கள் என்ற போர்வையில் ஆண்கள் யாருமில்லாத நேரத்தில் தங்களை தோழர்களாய் கூறிக் கொண்டு பெண்களிடம் யார்,யாரெல்லாம் வீட்டுக்கு வருகிறார்கள். தோழர் இப்போது என்ன  இயக்கப் பணி செய்கிறார்? என்பதையெல்லாம் நைசாகப் பேசி தெரிந்துக் கொள்ள முயல்வார்கள். ஆனால், அவர்கள் யார்? என்பதை  பட்டும் படாமல் இருக்கும் நடவடிக்கையால் பெண்களுக்கு மட்டுமல்ல அக்கம் பக்கத்து ஆட்களுக்கும்  தெளிவாக தெரிந்து விடும். 

தோழர் தமிழரசன் இன்னும் எளிமையானவர். இல்லையென்றால், தன் சொந்த வீடு போல, என் வீட்டு வாசலில் மண்டிக் கிடக்கும் புற்களை செதுக்க 
முனைவாரா? அடுத்த மூன்று நாட்கள் தோழர் தங்கியிருந்தார். பல்வேறு அரசியல் விடயங்கள் பேசினோம். சில கருத்து முரண்பாடுகள் நீடித்தன. மீண்டும் தோழரை சந்திப்போம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், எதிரிகள் அவரை வெகு சீக்கிரம் கொன்று விட்டார்கள். அவர் இறப்புச் செய்தியை நான் என் மனைவியிடமும், அந்த சில நாட்களில் அவருடன் ஐக்கியப்பட்டிருந்த அருகாமை வீட்டாரிடம் சொன்னேன். ஏதோ அவர்கள் தங்களில் ஒருவரை இழந்து விட்டதாய் துக்கப்பட்டார்கள்.

திங்கள், 20 ஜூன், 2016

அரசியல், கலை இலக்கியம் என்று தொடர்ந்து எழுதி வரும் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் ‘மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு’ புத்தகம் படிக்க நேர்ந்தது. மொத்தம் இருபத்தி எட்டு கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் பல விடயங்களை தனக்கே உரித்த பாணியில் அலசியிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவரது தொடக்க கால மார்க்சிய அரசியல் தொடர்புகள் பற்றிய கட்டுரைக்குதான் ‘மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு’ என்று தலைப்பிட்டிருக்கிறார். அதுவே, புத்தகத்தின் தலைப்பாய் மாறியிருக்கிறது. அதை ஏன் மணல் மேடாய் கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அவரின் இன்றைய எழுத்துச் செயல்பாட்டுக்கு அதுதானே அஸ்திவாரம்.

அதில். கோவை ஞானி, எல். அப்பு, எஸ்.வி ஆர், கண்ணாக்குட்டி, எஸ்.என் நாகராசன் போன்றவர்களின் செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்த அனுபவங்களை எழுதுகிறார். அதே சமயம் அவரது தந்தையாரின் மார்க்சிய அரசியல் ஊடான நிகழ்வுகளையும் அடிக் கோடிடுகிறார். அதனால் தான் சொன்னேன் மணல் மேடு அல்ல, பண்பட்ட நிலம் தான் அவருடைய தொடக்க காலம் என்று. ஆனால், அடிக்கடி நக்சலிசம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அப்படியொரு இசம் எனக்குத் தெரிந்து இல்லை. நக்சல்பாரி இயக்கத்தில் சில ஆண்டுகள் முழுநேர ஊழியனாய் பணியாற்றியவன் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். அதே சமயம் கோவை ஞானியைப் பற்றிய அவரது விமர்சனம் நேர்த்தி. கா. சிவத்தம்பி பற்றிய கட்டுரையில் அவரது மதிப்பீடும் நன்று. ஒரு  இலக்கிய செயல்பாட்டாளன் குறைகளுடன் ஏற்றுக் கொள்ளத் தக்கவன். அவன் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியாய் இல்லாதவரை. தோழர் யமுனா ராஜேந்திரன் கா. சிவத்தம்பியோடு நிறுத்திக் கொள்ளாமல் கைலாசபதி, ஏ.ஜே கனகரட்ணா, நந்தினி சேவியர் போன்ற மார்க்சிய இலக்கிய ஆளுமைகள் பற்றியும் எழுதலாம். அவரது மற்ற புத்தகங்களில் எழுதியுள்ளாரா? என தெரியவில்லை.

ருஸ்டிக்கும், அருந்ததிராய்க்கும் உள்ள வேறுபாடுகள் குறித்துச் சொல்லும் கட்டுரை நன்று. அருந்ததிராய் எனும் ஆளுமை எனும் கட்டுரையில் அவரது நிறைகளை சிலாகிக்கும் போது அடிப்படையில் அவர் நூதன மார்க்சிய எதிர்ப்பாளராய் இருப்பதை இன்னும் அழுத்தமாய் கூறி இருக்கலாமோ? என தோன்றுகிறது. சத்திய சோதனையின் மீதான வல்லுறவு என்ற கட்டுரை மிகச் சிறப்பு. ஸ்டாலினைப் பற்றிய உங்களது பார்வையில் அவரது எதிர்ப்பாளர்களையே நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் தோழர் யமுனா ராஜேந்திரன். [இலக்கிய இந்துத்துவம்: இடி முழக்கம் மற்றும் கள்ள மௌனம்] பக்கம் 118 ல்  “எனது எழுத்துக்களிலிருந்து ஸ்டாலினிய ஆதரவு தொடர்பான எந்தக் கருத்துக்களையும் அவர்களால் தலை கீழாக நின்றாலும் சுட்டிக் காட்ட முடியாது” என்று நீங்களே கூறுகிறீர்கள். தோழர் ஸ்டாலினைப் பற்றிய புத்தகங்கள் தமிழிலேயே இரண்டு மிகச் சிறப்பாய் வந்திருக்கின்றன.

 ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்- எம். ஆர் அப்பன்
ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் - குரோவர் ஃபர் [தமிழில் செ.நடேசன்]

என்னைப் போன்ற தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இவை வரப்பிரசாதம். உங்களைப் போன்ற ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கு இன்னும் ஸ்டாலின் பற்றிய உண்மைகள் அறிய வாய்ப்பு அதிகம்.

தோழர் மாவோவின் ஸ்டாலின் பற்றிய வரையறை இன்றும் உயிருடன் உள்ளது என்பது என் கருத்து. மற்றபடி, போர்னோகிராபி இலக்கிய உலகம்- பீடபைல் கட்டுரை தமிழுக்கு புதிது. அருமை. ஜெயகாந்தனைப் பற்றிய இரு கட்டுரைகளும் அப்படியே.

ஸ்ரீவித்யா பற்றிய கட்டுரையில் அவர் மீது அனுதாபம் கொள்ள வைக்கிறீர்கள். ஆனால், அவரது சமூகப் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழுகிறது. அவரோடு ஒப்பிடும் போது சில்க் சுமிதா சிறிய அளவிலேனும் மற்றவர்களுக்கு குறிப்பாய் திரைத்துறையில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களிடம் அன்பு காட்டி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார் என கேள்விப்பட்டுள்ளேன்.
இந்த நேரத்தில், ஆந்திர மாநிலத்தில் நடிகை சிநேகலதா போன்றவர்கள் நக்சல்பாரி இயக்கங்களுக்கு வெளிப்படையாய் உதவி அதன் காரணமாய் கொல்லப்பட்டார்கள் என்பதையும் நினைவு கூர்கிறேன்.

நிற்க. சில்க் சுமிதா நடித்த வண்டிச்சக்கரம் படத்திற்கு வினு சக்ரவர்த்தி கதாசிரியர் மட்டுந்தான். இயக்கம் கே. விஜயன் என்று அறிகிறேன்.

உங்களது கட்டுரைகளில் தொனிக்கும் இந்துத்துவா எதிர்ப்புக்கு என செவ்வணக்கங்கள்.


வியாழன், 16 ஜூன், 2016

ஈழத்தைச் சேர்ந்த தோழர் நந்தினி சேவியர் சமீபமாகத்தான் எனக்கு அறிமுகம். அதிலும், என்னுடைய ‘தறியுடன்...’ நாவலை அவர் படித்தப் பின்னால்,  அதன் பின்னட்டையில் இருந்த ஒரு பத்தியை அவர் முகநூலில் பதிவிட்ட பின்புதான் தெரிந்தது அவர் யார் என்று. அரை நூற்றாண்டுகளாய் ஈழத்தில் முற்போக்கு இலக்கிய ஆளுமையாய் இருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றி தற்போது தான் தெரிய வந்திருக்கிறது என்றால், அது என் தேடலின் குறை என்று தான் கூற முடியும். 2016 புத்தகக் காட்சியில் விடியல் அரங்கில் அவரது ‘நந்தினி சேவியர் படைப்புகள்’ ஒரே புத்தகமாய் எனக்குக் கிடைத்தது. இயல்பிலேயே மிக நிதானமான வாசிப்புப் பழக்கத்தைக் கொண்ட எனக்கு அவருடைய புத்தகத்தை ஒரே நாளில் படிக்க முடிந்தது ஆச்சரியந்தான். அதற்கு காரணம் அதிலிருந்த எளிமையா அல்லது மனதுக்கு நெருக்கமான எழுத்துக்களா என்பதை பகுத்துணர்வது சிரமம் தான்.

முதலில், நான் வாசித்த அவரது சிறுகதைகளில் பலவும் தெளிந்த நடையுடனும், சிறப்பான உள்ளடக்கத்துடனும் இருந்தன. அநாவசிய வர்ணனைகள் இன்றி பளிச்சென்ற விதத்தில் அவை இருக்கின்றன என்று கூறினால் மிகையல்ல. ‘தொலந்துப் போனவர்கள்’ சிறுகதையில் இன உரிமைப் போரினால் எதிரிகளால் சிதைக்கப்பட்ட அந்த நகரம் மனதை விட்டு அகலவில்லை. ஏதோ நானே அந்த நகரத்தில் வசித்து தொலைந்துப் போனவர்களில் ஒருவனாய் மாறி விட்டதாய் தோற்றம். மானுடம் யுத்தக் களங்களில் எப்படியெல்லாம் தோற்கடிக்கப்படுகிறது என்பதை நினைக்கும் போது நீண்ட பெருமூச்சொன்று எழுகிறது.

‘வேட்டை’ சிறுகதையில் ஒரு வளர்ப்புப் பிராணியான நாய்க்கும், அந்த தம்பர் தாத்தாவுக்குமான உறவு அற்புதமானது. ‘வெள்ளையா... அதுக்குள்ளான் கிடக்கு... விட்டிடாதை... எழுப்படா... ‘ என அவர் தன் வேட்டை நாயை இரைக்காக உசுப்பும் போது, அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இறுதியில் வெள்ளையனின் மரணம் மனதைக் கனக்கச் செய்கிறது.
  ‘அயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்” சிறுகதை ஒரு சமூகப் பார்வையின் பால் எழுதப்பட்ட அருமையான கதை. ஒரு சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும், அதற்கான தீர்வும் சொல்லப்பட்டிருப்பது அழகு.
  ‘ஒரு பகற் பொழுது’ சிறுகதை சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் மனப்பாங்கு பற்றிய பண்பாட்டைச் சொல்கிறது. அதுவும் அருமை.

தோழர் தனது மாவோ சிந்தனையாற்றலை தனது கட்டுரைகள் வாயிலாய் விவரிக்கிறார். அதனூடே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான விதம் பற்றிக் கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அமரர் பா.ஜீவானந்தம் அவர்களே மார்க்சிய தொடர்புகளுக்கு காரணம் என அறியும் போது, தோழர் ஜீவாவை எண்ணி மனம் பெருமைக் கொள்கிறது. டானியல், டொமினிக் ஜீவா, போன்றோர் அவரால் வென்றெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் பின், ஏஜே கனகரட்ணா, கைலாசபதி, என்.கே ரகுநாதன், சிவத்தம்பி, எஸ் பொ என்றழைக்கப்படும் பொன்னுதுரை, செ, கணேசலிங்கன் போன்ற முற்போக்குப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பை உணர முடிகிறது.

தோழர் நந்தினி சேவியர் அவர்கள் வெறும் எழுத்தாளராய் மட்டும் இல்லாமல் அறுபதுகளிலேயே தீண்டாமை ஒழிப்பில் இயக்கம் சார்ந்து போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார். அவர் தலித் எழுத்தாளர் மட்டுமல்ல, சாதி ஒழிப்பை மாவோ சிந்தனை வாயிலாய் தான் நிறைவேற்ற முடியும் என்பதை விஞ்ஞானப் பூர்வமாய் உணர்ந்திருக்கிறார். ஆகவே, தன்னை இடதுசாரி எழுத்தாளன் என்று கூறுவதையே அவர் விரும்புகிறார்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாய் இலங்கையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் இருந்தாலும் அவற்றின் பிரதிநிதிகளாய் நிறைய அரசியல் தலைவர்கள் வெளிப்பட்டாலும், தோழர் சண்முகதாசனை பெருமையாய் நினைவு கூர்கிறார். ஈழத்துத் தந்தை என நமக்கு சொல்லப்பட்டவர்களெல்லாம் எவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதிகளாய் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. 1980 க்குப் பிறகான இனப்போர் சூழல் இடதுசாரிகளுக்கு எத்தனை நெருக்கடியான காலமாய் இருந்ததை அறிய முடிகிறது. உண்மையான கம்யூனிஸ்ட்கள் இயக்கங்களின் குறுங்குழுவாதப் போக்கால் எப்படியெல்லாம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும், எஞ்சியவர்கள் ஏன் மௌனமாகிப்  போனார்கள் என்பதும் தோழர் நந்தினி சேவியர் வாயிலாய் தெரிய வருகிறது.  அவரது உள்ளக் குமுறலில் சொல்லப்படாத விடயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

தோழரின் வாழ்க்கையை அறியும் போது சமூக மாற்றத்தை விரும்பும்  படைப்பாளிகள் ஊக்கமுடன் தங்கள் பணியை தொடர உத்வேகமளிக்கிறது. ஆனால், தோழர் தன்னடக்கத்தோடு கூறுகிறார் “இளைய தலைமுறை என்னை வாழ்த்த வேண்டும். முதிய தலைமுறை என்னைப் புகழ வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை” என்று.

தோழர் நந்தினி சேவியரின் தொடர்பு என்னைப் பொறுத்தவரை பெருமை கூற வைக்கிறது.