வியாழன், 27 அக்டோபர், 2016

நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மோடியின் கொடும்பாவி எரித்தும் போராடிய நமது தோழர்கள் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் சிறைவாசம் அனுபவித்து பிணையில் வெளி வந்திருக்கிறார்கள். அவர்களில், தமிழ்த்தேசமக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரான தோழர் செந்தமிழ்குமரனுக்கு வாழ்த்து தெரிவித்த போது அவர் சில சுவாரஸ்யமான சிறைச் சம்பவங்களை என்னிடம் கூறினார். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

தோழர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு செங்கல்பட்டு கிளை சிறைக்குள் நுழைந்ததுமே சிறை அதிகாரிகள் அவர்களிடம் கெடுபிடி காட்டியிருக்கிறார்கள். அப்போது தோழர்கள் அதை வன்மையாக கண்டித்திருக்கிறார்கள். சட்டென சிறை அதிகாரி ஒருவர் அதிர்ந்து போய் ‘நீங்கள் என்ன நக்சலைட்டா? தமிழ்நாடு விடுதலைப் படையா?’என விசாரித்திருக்கிறார். பிறகு, தோழர்கள் சிறை அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவரான தோழர் சதுரைப் பிரபாகரன் ‘என்ன தோழர் நக்சலைட்டா? என கேட்கிறார்கள். சிறை அதிகாரிகளுக்கு நக்சல்பாரிகள் என்றால் அவ்வளவு பயமா?” என வினவியிருக்கிறார்.

அதற்கு தோழர் செந்தமிழ்குமரன் “ஆமாம் தோழரே, நக்சல்பாரிகள் சிறைகளில் நடத்திய போராட்டங்கள் ஏராளம். குறிப்பாய், புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் போன்றவர்கள் சிறைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே நக்சல்பாரி தோழர்கள் பலரும் போராடியிருக்கிறார்கள். மேலும், தோழர் பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்...’ நாவலில் சில சிறைப் போராட்டங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன” என விளக்கியிருக்கிறார்.

உடனே ஆர்வமான சதுரை பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் “அப்படியா, தறியுடன் நாவல் படிக்க வேண்டுமே” என கேட்டிருக்கிறார்கள். அதற்கு தகுந்தாற் போல தோழர்களுக்கு பிணைக் கிடைக்க கால தாமதம் ஆகியிருக்கிறது. இந்த சமயத்தில் தோழர்களை மனுப் பார்க்க வந்தவர்களிடம் தறியுடன் உள்ளிட்ட சில புத்தகங்களை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ள அவர்களும் மறுநாளே, அவற்றை சிறைத் தோழர்களிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறார்கள். அங்கே, தறியுடன் நாவல் படிக்கப்பட்டு அதன் மீதான விவாதமும் நடந்திருக்கிறது.

தமது முன்னோடிகள் செய்த விலை மதிக்க முடியாத வீரஞ்செறிந்த போராட்டங்களால் தான் சிறையில் நமக்கு மரியாதை தரப்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்ட தோழர்கள், தறியுடன் நாவலில் வருவது போலவே சிறைப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என உறுதி பூண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஒருநாள் சிறையில் கஞ்சா பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக் கொண்டு சிறை நிர்வாகம் அனைத்துக் கைதிகளுக்கும் தண்டனையாக கொசுவர்த்தியை தடை செய்திருக்கிறது. அவ்வளவுதான், தோழர்கள் மற்ற கைதிகளை ஒருங்கிணைத்து தவறு செய்யாதவர்களுக்கு ஏனிந்த தண்டனை? என குரல் கொடுக்க, மேலதிகாரிகள் வந்து அவர்களது போராட்டத்திற்கு செவி மடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, கொசுவர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு சில கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒரு போராட்டம் வெற்றியடைய தோழர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

சிறையில் போராட்டக்களத்திற்கு ‘தறியுடன்...’ நாவல் காரணமாய் விளைந்ததை தோழர்கள் கூறிய போது மிக மனநிறைவாய் உணர்ந்தேன். நாவல் எழுதப்பட்ட நோக்கம் அடக்குமுறைக்கு எதிராய் போராடத் தூண்டுவதுதான். இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக படைக்கப்படுவதல்ல, அது மக்களுக்கானது...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

செப்டம்பர்- 12 தியாகிகள் நினைவு தினம்.

தமிழக நக்சல்பாரி இயக்க வரலாற்றில் தங்கள் இன்னுயிரை ஈந்து மக்கள் பணியாற்றிய தோழர்கள் பலரையும் நினைவு கூறவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. தோழர் எல்.அப்பு கோவை நகரின் கோட்டைமேடு பகுதியைப் பூர்வீகமாய் கொண்டவர். அவரது இயற்பெயர் அற்புதம். தந்தையாரின் பெயர் லியோ.  அற்புதம் என்ற பெயர் பிறகு எல்.அப்புவாய் மாறியது. தனது சமூக வாழ்வின் தொடக்கத்தில்  தோழர் ராவுண்ணியுடன் இணைந்து   பத்திரிக்கை தொடங்கிய நிலையில் இந்திய பொதுவுடமைக் கட்சி [மார்க்சிஸ்ட்] அமைப்பில் இணைந்த அவர்.  அதன் நாளிதழான ‘தீக்கதிர்’ பத்திரிக்கையின் முதல் ஆசிரியராவார். பின்பு, அகில இந்திய அளவில் அந்த அமைப்போடு கொள்கை ரீதியாய் முரண்பட்டு தோழர் சாருமஜீம்தார் தலைமையிலான புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்தார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் நக்சல்பாரி  கிராமத்தில் உருவான உழவர் போராட்டத்தின் காரணமாய்  சாருமஜீம்தார், கனுசன்யால், ஜங்கர் சந்தால் ஆகியோருடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்] அமைப்பு உருவாக காரணமாய் இருந்தார்.

அந்த கட்சியே பின்னாளில் நக்சல்பாரிக் கட்சியென அழைக்கப்பட்டது. நக்சல்பாரி கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் வெகுண்டெழுந்த உழவர் போராட்டத்தை அன்றைய செஞ்சீனத்தின் தமிழ்  வானொலி ஒலிப்பரப்பு‘வசந்தத்தின் இடி முழக்கம்’ என்று வர்ணித்தது.

நக்சல்பாரி அமைப்பு தொடக்கத்தில் அழித்தொழிப்புக் கொள்கை என்ற வழிமுறையை தனது நடைமுறை தந்திரமாய் பின்பற்றியது. அதன் விளைவாய் தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கொடிய நிலவுடமையாளர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்த வீரஞ்செறிந்த உழவர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை உருவாக்கியது. தோழர் எல்.அப்பு பல்வேறு அழித்தொழிப்பு நடவடிக்கையால் போலீசால் தேடப்பட்டு வந்தார். ஆயினும், அவர் தனது தலைமறைவு காலத்திலும் கூட வீதி நாடக கலை வடிவத்தைக் கையிலெடுத்து தான் அதில், பண்ணையாராக நடித்தார். அதனாலேயே அவர் கூலி விவசாயிகள் மத்தியில் பண்ணையார் தோழர் என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

1970களில் வேலூரில் ஒரு தங்கும் விடுதியில் இருந்து அவரை போலீசார் பிடித்துச் சென்றனர். இன்று வரையிலும் அவரை என்ன செய்தார்கள்? என்பது மர்மமாகவே உள்ளது. அழித்தொழிப்புப் பாதையின் தளகர்த்தாவாய் இருந்த எல்.அப்பு. நக்சல்பாரி வரலாற்றில் தமிழக நாயகனாவார்.

தோழர் பாலன். தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்ஸி பட்டம் பெற்றவர். அவர் நக்சல்பாரி வழிமுறையால் ஈர்க்கப்பட்டு, தனது புரட்சிகர வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தார். முதலில், மிக கொடுமையான கந்து வட்டிக்காரன் நல்லம்பள்ளி பெரியண்ண செட்டியை மற்ற தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழித்தார். அதில், அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தன் தண்டனைக் காலம் முடிந்து சேலம் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, தோழர் பாலன் சற்றும் சோர்வில்லாமல் அநீதிகளுக்கு எதிராய் மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டியமைக்கிறார்.

அந்த நேரம் தோழர் சாருமஜீம்தாருக்குப் பின்னால், நக்சல்பாரி இயக்கம் பிளவுண்டிருந்தது. கூட்டக்குழு என்ற பெயரில் தோழர்கள் தமிழ்வாணன், ஏலகிரி இராமன், தமிழரசன் போன்றவர்கள் ஒரு பிரிவாய் இயங்கி வந்தார்கள். அதுவே பின்னாளில் ஆந்திரத்துடன் இணைந்து மக்கள் யுத்தக் குழுவாய் மாறியது.  அவர்களின் வழி காட்டுதலை ஏற்று மக்கள் யுத்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் தோழர் பாலன். அவரது போராட்ட வழி முறைகள் ஆதிக்க பண்ணைகளை நடுங்க வைத்தன. சாதிவெறியர்கள் பதைத்தார்கள். இதன் விளைவாய் அரசு அவர்களைப் பாதுக்காக்க வால்டர் தேவாரம் என்பவரை வடாற்காடு மற்றும் சேலம் தர்மபுரி டி.ஐ.ஜி யாக நியமித்தது.

திருப்பத்தூரில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்தை சாக்காக வைத்து தேவாரம் ‘நக்சலைட்டுகளை’ ஒடுக்குவதாய் கூறி, புரட்சியாளர்களை அழித்தொழிக்க தொடங்கினான். அவனது நரவேட்டைக்கு முதல் பலி தோழர் பாலன். 1980 செப்டம்பர் 9 ந்தேதி இரவு  தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் அருகிலுள்ள சீரியம்பட்டி என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாலனையும் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட தோழர்களையும் பெரும் படையுடன் வந்து கைது செய்கிறான் தேவாரம். தோழர் பாலன் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பாலக்கோடு காவல் நிலையம் கொண்டு செல்லப்படுகிறார். அங்கே, கடுமையான போலீஸ் சித்ரவதையில் அவரது கால் முறிக்கப்படுகிறது.

அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் குற்றுயிரும்,குலையுயிருமாய் கொண்டு வந்து சேர்க்கிறது போலீஸ். அவர் இறந்து விடுவார் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தோழர் பாலன் மேல் மரியாதை உடைய மருத்துவர்கள் அவரை குணமாக்க முயல, கோபம் கொண்ட தேவாரம் வலுக்கட்டாயமாய் பாலனை சென்னைக்கு தூக்கிச் செல்கிறார். வழியிலேயே போலீஸ் வேனில் சித்ரவதை தொடர்கிறது. சென்னை அரசு மருத்துவமனைக்கு பாலன் கொண்டு வரப்பட, அங்கேயும் சில மனிதாபிமானமுள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முயல, அவர்கள் தேவாரத்தால் மிரட்டி தடுக்கப்படுகிறார்கள். சாகும் தறுவாயில் தனக்கு மருத்துவம் பார்க்க முயன்ற அந்த டாக்டரை அருகில் அழைத்து ‘நீங்கள் கிருத்துவரா?’ எனக் கேட்டு ‘இந்த உலகத்தை மீட்க வந்த இயேசு நாங்கள் தான். நக்சல்பாரி பாதையில் இந்த நாடு வறுமையில் இருந்து ஒருநாள் மீளும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்க’ என்று கூறி இறந்திருக்கிறார் தோழர் பாலன்.

மருத்துவமனையில் பலரும் அழுதிருக்கிறார்கள். அதன் பின், போலீஸ் தோழர் பாலனின் உடலைக் கூட அவரது பெற்றோரிடத்தில் ஒப்படைக்கவில்லை. வெறும் சாம்பலைத்தான் தருகிறார்கள். தோழர் பாலன் இறந்ததை கேள்விப்பட்டு சிறையில் இருந்த தோழர் தமிழரசன் கலங்கியிருக்கிறார். எதற்குமே கலங்காத அவர் மனம் ‘தன்னலமில்லாத புரட்சியாளன் தோழர் பாலனை  இழந்து விட்டோமே’ என கசிந்துருகி இருக்கிறது.

உழைக்கும் மக்களின் அன்புக்குரிய தோழர் பாலன் இறந்தது செப்டம்பர் - 12 நாள். அவரது நினைவாய் தான் அனைத்து\நக்சல்பாரி தியாகிகளுக்கும் நினைவு தினம் அந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது. தோழர்கள் இருவருக்கும் தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில், நாய்க்கன் கொட்டாயில் 1984 ல் சிலை நிறுவப்பட்டது.

என்னுடைய ‘தறியுடன்...’ நாவலில் தோழர் பாலன் பற்றியும், அப்பு -பாலன் சிலை திறப்பு விழாவில் நேரடியாய் கலந்துக் கொண்டவன் என்ற முறையில் அந்த மாபெரும் நிகழ்வை பற்றியும்,  இன்னும் விரிவாய் எழுதியுள்ளேன். தோழர் பாலனுக்கு நாவலை சமர்ப்பித்திருக்கிறேன்..

‘எல்.அப்புடா... எங்கள் தலைவரடா...
ஹேய்... எல்.அப்புடா... எங்கள் தலைவரடா...’

‘அணையாத தீபமானாய் தோழா...
எங்கள் பாலா...’

வியாழன், 1 செப்டம்பர், 2016


அந்த காலை நேரத்தில் வழக்கம் போலத்தான் விசைத்தறிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். காலை உணவு நேரம். வழியில் எதிர்ப்பட்ட தொழிலாளி ஒருவர் ‘ஒங்கூட்டுக்கு ஒறம்பர வந்திருக்குறாங்க...’ என்று போகிற போக்கில் ஒரு தகவலாய் சொல்லி விட்டுச் சென்றார். எனக்கு மனதுக்குள் சின்ன சிரிப்பு எழுந்தது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கும், மனைவிக்கும் உற்றார் உறவினர்கள் ஊரில் இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட எங்களைத் தேடித்தான் அவர்கள் யாரும் வருவதில்லை. எனவே, வீட்டுக்கு தோழர்கள் யாராவது தேடி வந்திருப்பார்கள் என்றுதான் நினைத்தபடி நடந்தேன்.

ஆனால், தோழர் தமிழரசன் தேடி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அதற்கு முன், அவர் அப்படி வந்தவர் அல்ல. மேலும், அவர் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து வெளியேறி  தமிழ்  தேசிய இனப் போராட்டத்தை முன்னிறுத்தி தனி அமைப்பு கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. நான் மக்கள் யுத்தக் குழுவில் முரண்பட்டு வெளியேறும் எண்ணத்துடன் இருந்தேன். இந்த சமயத்தில் தான் தோழர் அதை யார் மூலமாகவோ தெரிந்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்திருந்தார். தோழரை மக்கள் யுத்தத்தில் இருந்த சமயத்தில் ஓரிருமுறை   சந்தித்து இருக்கிறேன். 

என்றாலும், நெருக்கமான பழக்கமில்லை. ஏனெனில், நானும், தோழரும் வெவ்வேறு மாவட்டங்கள் என்பதால், நெருங்கிப் பழக வாய்ப்பில்லை. 

நான் வீட்டை அண்மித்த தருணம். தோழர் சட்டையை கழட்டி வைத்து விட்டு, வீட்டு வாசலில் மண்டிக் கிடந்த புற்களை அகற்றிக் கொண்டிருந்தார். எனவே, என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. ஆனால், வந்திருப்பது யார்? என்று தெரிந்ததும் ஆச்சரியம் தாளவில்லை. ‘தோழர்..’ என்று நான் அழைத்ததும் நிமிர்ந்துப் பார்த்து சிரித்தார்.  ‘எப்ப வந்தீங்க?’ என்று கேட்டதற்கு ‘ஏழு மணிக்கே வந்துட்டேன் தோழர். அத வுடுங்க... வூட்டு வாசலை ஏன் இப்படி வச்சிருக்கீங்க?’ என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர் வேலை துவங்கப் போக, நான் தடுத்தேன். 

பிறகு, மனைவியிடம் ‘எதுக்கும்மா... தோழரை இந்த வேலையெல்லாம் செய்ய விட்டே?’ என்று கேட்டு முடிப்பதற்குள் ‘நா என்ன விருந்தாளியா? தோழர்’ என்று மேலே பேச விடாமல் தடுத்தார் தமிழரசன். பொதுவாகவே நக்சல்பாரி தோழர்கள் சக தோழர்கள் வீட்டுக்குச் சென்றால், தங்கள் சட்டையை கழட்டி விட்டு ஒரு துண்டை போர்த்திக் கொண்டு மண் தரையாக இருந்தாலும், சகஜமாய் உட்கார்ந்து விடுவார்கள். வெளியிலிருந்து யார் வந்தாலும் வந்திருப்பவர் வெளியூர்காரர் என்ற தோரணையை தவிர்க்கவே இந்த நடைமுறை. 

அதே சமயம், தோழர்களின் இந்த இயல்பான நடவடிக்கை அவர்கள் தோழர்கள் தான் என்பதை வீட்டில் இருப்பவர்களுக்கு தெளிவாய் தெரிவித்து விடும். சில சமயம், உளவுத்துறை ஆட்கள் தோழர்கள் என்ற போர்வையில் ஆண்கள் யாருமில்லாத நேரத்தில் தங்களை தோழர்களாய் கூறிக் கொண்டு பெண்களிடம் யார்,யாரெல்லாம் வீட்டுக்கு வருகிறார்கள். தோழர் இப்போது என்ன  இயக்கப் பணி செய்கிறார்? என்பதையெல்லாம் நைசாகப் பேசி தெரிந்துக் கொள்ள முயல்வார்கள். ஆனால், அவர்கள் யார்? என்பதை  பட்டும் படாமல் இருக்கும் நடவடிக்கையால் பெண்களுக்கு மட்டுமல்ல அக்கம் பக்கத்து ஆட்களுக்கும்  தெளிவாக தெரிந்து விடும். 

தோழர் தமிழரசன் இன்னும் எளிமையானவர். இல்லையென்றால், தன் சொந்த வீடு போல, என் வீட்டு வாசலில் மண்டிக் கிடக்கும் புற்களை செதுக்க 
முனைவாரா? அடுத்த மூன்று நாட்கள் தோழர் தங்கியிருந்தார். பல்வேறு அரசியல் விடயங்கள் பேசினோம். சில கருத்து முரண்பாடுகள் நீடித்தன. மீண்டும் தோழரை சந்திப்போம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், எதிரிகள் அவரை வெகு சீக்கிரம் கொன்று விட்டார்கள். அவர் இறப்புச் செய்தியை நான் என் மனைவியிடமும், அந்த சில நாட்களில் அவருடன் ஐக்கியப்பட்டிருந்த அருகாமை வீட்டாரிடம் சொன்னேன். ஏதோ அவர்கள் தங்களில் ஒருவரை இழந்து விட்டதாய் துக்கப்பட்டார்கள்.

திங்கள், 20 ஜூன், 2016

அரசியல், கலை இலக்கியம் என்று தொடர்ந்து எழுதி வரும் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் ‘மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு’ புத்தகம் படிக்க நேர்ந்தது. மொத்தம் இருபத்தி எட்டு கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் பல விடயங்களை தனக்கே உரித்த பாணியில் அலசியிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவரது தொடக்க கால மார்க்சிய அரசியல் தொடர்புகள் பற்றிய கட்டுரைக்குதான் ‘மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு’ என்று தலைப்பிட்டிருக்கிறார். அதுவே, புத்தகத்தின் தலைப்பாய் மாறியிருக்கிறது. அதை ஏன் மணல் மேடாய் கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அவரின் இன்றைய எழுத்துச் செயல்பாட்டுக்கு அதுதானே அஸ்திவாரம்.

அதில். கோவை ஞானி, எல். அப்பு, எஸ்.வி ஆர், கண்ணாக்குட்டி, எஸ்.என் நாகராசன் போன்றவர்களின் செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்த அனுபவங்களை எழுதுகிறார். அதே சமயம் அவரது தந்தையாரின் மார்க்சிய அரசியல் ஊடான நிகழ்வுகளையும் அடிக் கோடிடுகிறார். அதனால் தான் சொன்னேன் மணல் மேடு அல்ல, பண்பட்ட நிலம் தான் அவருடைய தொடக்க காலம் என்று. ஆனால், அடிக்கடி நக்சலிசம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அப்படியொரு இசம் எனக்குத் தெரிந்து இல்லை. நக்சல்பாரி இயக்கத்தில் சில ஆண்டுகள் முழுநேர ஊழியனாய் பணியாற்றியவன் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். அதே சமயம் கோவை ஞானியைப் பற்றிய அவரது விமர்சனம் நேர்த்தி. கா. சிவத்தம்பி பற்றிய கட்டுரையில் அவரது மதிப்பீடும் நன்று. ஒரு  இலக்கிய செயல்பாட்டாளன் குறைகளுடன் ஏற்றுக் கொள்ளத் தக்கவன். அவன் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியாய் இல்லாதவரை. தோழர் யமுனா ராஜேந்திரன் கா. சிவத்தம்பியோடு நிறுத்திக் கொள்ளாமல் கைலாசபதி, ஏ.ஜே கனகரட்ணா, நந்தினி சேவியர் போன்ற மார்க்சிய இலக்கிய ஆளுமைகள் பற்றியும் எழுதலாம். அவரது மற்ற புத்தகங்களில் எழுதியுள்ளாரா? என தெரியவில்லை.

ருஸ்டிக்கும், அருந்ததிராய்க்கும் உள்ள வேறுபாடுகள் குறித்துச் சொல்லும் கட்டுரை நன்று. அருந்ததிராய் எனும் ஆளுமை எனும் கட்டுரையில் அவரது நிறைகளை சிலாகிக்கும் போது அடிப்படையில் அவர் நூதன மார்க்சிய எதிர்ப்பாளராய் இருப்பதை இன்னும் அழுத்தமாய் கூறி இருக்கலாமோ? என தோன்றுகிறது. சத்திய சோதனையின் மீதான வல்லுறவு என்ற கட்டுரை மிகச் சிறப்பு. ஸ்டாலினைப் பற்றிய உங்களது பார்வையில் அவரது எதிர்ப்பாளர்களையே நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் தோழர் யமுனா ராஜேந்திரன். [இலக்கிய இந்துத்துவம்: இடி முழக்கம் மற்றும் கள்ள மௌனம்] பக்கம் 118 ல்  “எனது எழுத்துக்களிலிருந்து ஸ்டாலினிய ஆதரவு தொடர்பான எந்தக் கருத்துக்களையும் அவர்களால் தலை கீழாக நின்றாலும் சுட்டிக் காட்ட முடியாது” என்று நீங்களே கூறுகிறீர்கள். தோழர் ஸ்டாலினைப் பற்றிய புத்தகங்கள் தமிழிலேயே இரண்டு மிகச் சிறப்பாய் வந்திருக்கின்றன.

 ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்- எம். ஆர் அப்பன்
ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் - குரோவர் ஃபர் [தமிழில் செ.நடேசன்]

என்னைப் போன்ற தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இவை வரப்பிரசாதம். உங்களைப் போன்ற ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கு இன்னும் ஸ்டாலின் பற்றிய உண்மைகள் அறிய வாய்ப்பு அதிகம்.

தோழர் மாவோவின் ஸ்டாலின் பற்றிய வரையறை இன்றும் உயிருடன் உள்ளது என்பது என் கருத்து. மற்றபடி, போர்னோகிராபி இலக்கிய உலகம்- பீடபைல் கட்டுரை தமிழுக்கு புதிது. அருமை. ஜெயகாந்தனைப் பற்றிய இரு கட்டுரைகளும் அப்படியே.

ஸ்ரீவித்யா பற்றிய கட்டுரையில் அவர் மீது அனுதாபம் கொள்ள வைக்கிறீர்கள். ஆனால், அவரது சமூகப் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழுகிறது. அவரோடு ஒப்பிடும் போது சில்க் சுமிதா சிறிய அளவிலேனும் மற்றவர்களுக்கு குறிப்பாய் திரைத்துறையில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களிடம் அன்பு காட்டி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார் என கேள்விப்பட்டுள்ளேன்.
இந்த நேரத்தில், ஆந்திர மாநிலத்தில் நடிகை சிநேகலதா போன்றவர்கள் நக்சல்பாரி இயக்கங்களுக்கு வெளிப்படையாய் உதவி அதன் காரணமாய் கொல்லப்பட்டார்கள் என்பதையும் நினைவு கூர்கிறேன்.

நிற்க. சில்க் சுமிதா நடித்த வண்டிச்சக்கரம் படத்திற்கு வினு சக்ரவர்த்தி கதாசிரியர் மட்டுந்தான். இயக்கம் கே. விஜயன் என்று அறிகிறேன்.

உங்களது கட்டுரைகளில் தொனிக்கும் இந்துத்துவா எதிர்ப்புக்கு என செவ்வணக்கங்கள்.


வியாழன், 16 ஜூன், 2016

ஈழத்தைச் சேர்ந்த தோழர் நந்தினி சேவியர் சமீபமாகத்தான் எனக்கு அறிமுகம். அதிலும், என்னுடைய ‘தறியுடன்...’ நாவலை அவர் படித்தப் பின்னால்,  அதன் பின்னட்டையில் இருந்த ஒரு பத்தியை அவர் முகநூலில் பதிவிட்ட பின்புதான் தெரிந்தது அவர் யார் என்று. அரை நூற்றாண்டுகளாய் ஈழத்தில் முற்போக்கு இலக்கிய ஆளுமையாய் இருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றி தற்போது தான் தெரிய வந்திருக்கிறது என்றால், அது என் தேடலின் குறை என்று தான் கூற முடியும். 2016 புத்தகக் காட்சியில் விடியல் அரங்கில் அவரது ‘நந்தினி சேவியர் படைப்புகள்’ ஒரே புத்தகமாய் எனக்குக் கிடைத்தது. இயல்பிலேயே மிக நிதானமான வாசிப்புப் பழக்கத்தைக் கொண்ட எனக்கு அவருடைய புத்தகத்தை ஒரே நாளில் படிக்க முடிந்தது ஆச்சரியந்தான். அதற்கு காரணம் அதிலிருந்த எளிமையா அல்லது மனதுக்கு நெருக்கமான எழுத்துக்களா என்பதை பகுத்துணர்வது சிரமம் தான்.

முதலில், நான் வாசித்த அவரது சிறுகதைகளில் பலவும் தெளிந்த நடையுடனும், சிறப்பான உள்ளடக்கத்துடனும் இருந்தன. அநாவசிய வர்ணனைகள் இன்றி பளிச்சென்ற விதத்தில் அவை இருக்கின்றன என்று கூறினால் மிகையல்ல. ‘தொலந்துப் போனவர்கள்’ சிறுகதையில் இன உரிமைப் போரினால் எதிரிகளால் சிதைக்கப்பட்ட அந்த நகரம் மனதை விட்டு அகலவில்லை. ஏதோ நானே அந்த நகரத்தில் வசித்து தொலைந்துப் போனவர்களில் ஒருவனாய் மாறி விட்டதாய் தோற்றம். மானுடம் யுத்தக் களங்களில் எப்படியெல்லாம் தோற்கடிக்கப்படுகிறது என்பதை நினைக்கும் போது நீண்ட பெருமூச்சொன்று எழுகிறது.

‘வேட்டை’ சிறுகதையில் ஒரு வளர்ப்புப் பிராணியான நாய்க்கும், அந்த தம்பர் தாத்தாவுக்குமான உறவு அற்புதமானது. ‘வெள்ளையா... அதுக்குள்ளான் கிடக்கு... விட்டிடாதை... எழுப்படா... ‘ என அவர் தன் வேட்டை நாயை இரைக்காக உசுப்பும் போது, அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இறுதியில் வெள்ளையனின் மரணம் மனதைக் கனக்கச் செய்கிறது.
  ‘அயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்” சிறுகதை ஒரு சமூகப் பார்வையின் பால் எழுதப்பட்ட அருமையான கதை. ஒரு சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும், அதற்கான தீர்வும் சொல்லப்பட்டிருப்பது அழகு.
  ‘ஒரு பகற் பொழுது’ சிறுகதை சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் மனப்பாங்கு பற்றிய பண்பாட்டைச் சொல்கிறது. அதுவும் அருமை.

தோழர் தனது மாவோ சிந்தனையாற்றலை தனது கட்டுரைகள் வாயிலாய் விவரிக்கிறார். அதனூடே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான விதம் பற்றிக் கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அமரர் பா.ஜீவானந்தம் அவர்களே மார்க்சிய தொடர்புகளுக்கு காரணம் என அறியும் போது, தோழர் ஜீவாவை எண்ணி மனம் பெருமைக் கொள்கிறது. டானியல், டொமினிக் ஜீவா, போன்றோர் அவரால் வென்றெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் பின், ஏஜே கனகரட்ணா, கைலாசபதி, என்.கே ரகுநாதன், சிவத்தம்பி, எஸ் பொ என்றழைக்கப்படும் பொன்னுதுரை, செ, கணேசலிங்கன் போன்ற முற்போக்குப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பை உணர முடிகிறது.

தோழர் நந்தினி சேவியர் அவர்கள் வெறும் எழுத்தாளராய் மட்டும் இல்லாமல் அறுபதுகளிலேயே தீண்டாமை ஒழிப்பில் இயக்கம் சார்ந்து போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார். அவர் தலித் எழுத்தாளர் மட்டுமல்ல, சாதி ஒழிப்பை மாவோ சிந்தனை வாயிலாய் தான் நிறைவேற்ற முடியும் என்பதை விஞ்ஞானப் பூர்வமாய் உணர்ந்திருக்கிறார். ஆகவே, தன்னை இடதுசாரி எழுத்தாளன் என்று கூறுவதையே அவர் விரும்புகிறார்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாய் இலங்கையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் இருந்தாலும் அவற்றின் பிரதிநிதிகளாய் நிறைய அரசியல் தலைவர்கள் வெளிப்பட்டாலும், தோழர் சண்முகதாசனை பெருமையாய் நினைவு கூர்கிறார். ஈழத்துத் தந்தை என நமக்கு சொல்லப்பட்டவர்களெல்லாம் எவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதிகளாய் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. 1980 க்குப் பிறகான இனப்போர் சூழல் இடதுசாரிகளுக்கு எத்தனை நெருக்கடியான காலமாய் இருந்ததை அறிய முடிகிறது. உண்மையான கம்யூனிஸ்ட்கள் இயக்கங்களின் குறுங்குழுவாதப் போக்கால் எப்படியெல்லாம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும், எஞ்சியவர்கள் ஏன் மௌனமாகிப்  போனார்கள் என்பதும் தோழர் நந்தினி சேவியர் வாயிலாய் தெரிய வருகிறது.  அவரது உள்ளக் குமுறலில் சொல்லப்படாத விடயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

தோழரின் வாழ்க்கையை அறியும் போது சமூக மாற்றத்தை விரும்பும்  படைப்பாளிகள் ஊக்கமுடன் தங்கள் பணியை தொடர உத்வேகமளிக்கிறது. ஆனால், தோழர் தன்னடக்கத்தோடு கூறுகிறார் “இளைய தலைமுறை என்னை வாழ்த்த வேண்டும். முதிய தலைமுறை என்னைப் புகழ வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை” என்று.

தோழர் நந்தினி சேவியரின் தொடர்பு என்னைப் பொறுத்தவரை பெருமை கூற வைக்கிறது.

வெள்ளி, 3 ஜூன், 2016

படிப்பு வாசனையற்ற எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நான். அப்பா என்னையாவது படிக்க வைக்க வேண்டும் என கருதவில்லை. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் என்னை நெசவு வேலையில் ஒத்தாசைக்கு வைத்துக் கொண்டார். ஆனால், எனக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அவரிடம் சொல்லியும் பயனில்லாமல் போய் விட்டது. எனவே, டீக் கடைகள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முடி திருத்தும் கடைகள் என் வாசக சாலைகள் ஆயின. அந்த சின்ன ஊரில் இருந்த நூலகத்தில் அவ்வப்போது பாலகுமாரன்,சுஜாதா படிப்பதுண்டு. வீட்டுக்கெல்லாம் புத்தகங்கள் எடுத்து வர இயலாது. ‘என்னடா படிப்பு’ என திட்டு விழும். வளர்ந்த பிறகு, அப்பாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டு அதே ஊரில் தனியாக வசித்த சமயத்தில் தான் நக்சல்பாரி இயக்கத் தொடர்பு கிடைத்தது. அதுதான், எனக்கு படிப்பதில் ஒரு ஒளிமயமான வாசலை திறந்து விட்டது. மார்க்சிய புத்தகங்கள் அறிமுகமாயின. அதில், முதலில் நான் படித்த புத்தகம் ஜார்ஜ் பொலிட்சரின் ‘மார்க்சிய மெய்ஞானம்’ புரிந்துக் கொள்ள சிரமமாய் இருந்தது என்றாலும், விடா முயற்சியும் சக தோழர்களில் ஒத்துழைப்பும் இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை கற்றுத் தந்தது. கூலி விலை லாபம், என்ன செய்ய வேண்டும், நாட்டுப் புற ஏழை மக்களுக்கு என வெறிப் பிடித்தது போல படித்தேன். பிறகு, வால்கா முதல் கங்கை வரை, பொதுவுடமைதான் என்ன? போன்ற ராகுல்ஜியின் புத்தகங்களைப் படித்தேன். தாய், வீரம் விளைந்தது, அதிகாலையின் அமைதியில் போன்ற சோவியத் நாவல்கள் படித்தேன். கொஞ்ச நாட்களில், விசைத்தறிப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு  தலைமறைவாய் இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் இரவெல்லாம் படிப்பு. பகலில் இயக்க வேலை என போய்க் கொண்டிருந்தது. அப்போது தோழர் மாவோவின் புத்தகங்கள் சிலவற்றை இயக்கத் தோழர்கள் கொண்டு வந்துக் கொடுத்தார்கள். அவை இலங்கை தோழர்கள் மொழி பெயர்த்தவை. அது சோவியத்தும், சீனமும் முரண்பட்டிருந்த நேரம். லெனின் புத்தகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக் கடையில் சேலத்தில் கிடைக்கும். ஆனால், மாவோ புத்தகங்கள் அங்கெல்லாம் இருக்காது. இப்படி தோழர்கள் கொண்டு வந்துக் கொடுத்தால் தான் உண்டு. அதன் பிறகுதான் தோழர் ஸ்டாலின் எழுதிய புத்தகங்கள் ஒன்றிரண்டு கிடைத்தது. அவரது புத்தகங்களில் இன்றளவும் எனக்கு மிக பிடித்தமான புத்தகம் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல் வாதமும்’ என்று சொன்னால் மிகையில்லை. தலைமறைவு காலம் முடிந்ததும் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஆயுள் தண்டனைக் கைதிகளாய் இருந்த தோழர்கள் திம்மகாளி, நாகரசம்பட்டி கோபால், ராதாகிருஷ்ணன் போன்றவர்களையும் தியாகுவின் மாமனார் லெனின் என்கிற ரங்கசாமியையும் சந்திக்க வேண்டி வந்தது. அவர்களில்,  தோழர் நாகரசம்பட்டி கோபால் எனக்கு மார்க்சிய இயக்கவியல் வகுப்பெடுத்தார். ஓரளவு நான் அவரிடம் தான் இயக்கவியல் பிழையின்றி கற்றுக் கொண்டேன். சிறை மீண்டு வந்ததும், இயக்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்து இயங்க முடியாத சூழலுக்கு இட்டுச் சென்றது. அது மேலும் என்னைப் படிக்கத் தோன்றியது. இந்த சமயத்தில் நான் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழுவில் இருந்து கடுமையாய் முரண்பட்ட தோழர் தமிழரசன் தேசிய இன பிரச்னைகளை முன் வைத்தார். அதனால், அவர் தனி இயக்கம் காண வேண்டி வந்தது. அவர் என்னை ஊருக்கே வந்து சந்தித்து என் கவனத்தை தேசிய இனப் பிரச்னையின் பால் திருப்பினார். ஆனால், அடுத்த சில மாதங்களில் பொன்பரப்பியில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்டார். நானும் இயக்கத்தை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு, சற்றேரக் குறைய இருபது வருடங்கள் படிப்பதும், எழுதுவதும் நின்று போனது. வாழ்க்கையில் வெறுப்பு தலை தூக்கிய அந்த நேரத்தில், மார்க்சியத்திற்கான நம் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தான் என் இயக்க வாழ்க்கையை எழுதினால் என்ன? என்று தோன்றியது. அதற்காக பல நாட்கள் தூக்கம் கெட்டேன். பல்வேறு யோசனைகள் எழுந்தன. அதில், இறுதியாய் தோன்றியது நாவல் வடிவில் இயக்க வாழ்க்கையை சொல்வது என்பதே சரியெனப் பட்டது. அதன் பின்னர், பல்வேறு நாவல்களை தேடிப் பிடித்துப் படித்தேன். அதில், என் மனதுக்குப் பிடித்த மொழி பெயர்ப்பு நாவலான ‘நினைவுகள் அழிவதில்லை’ என்னை செதுக்கியது எனச் சொல்லலாம். பஞ்சும், பசியும், மலரும் சருகும் உட்பட பல்வேறு நாவல்களைப் படித்தேன். தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் பலரது எழுத்துக்களை வாசித்து விட்டு, மீண்டும் ஒரு முறை மார்க்சிய நூல்களை படித்து விட்டுத்தான் தறியுடன் நாவல் எழுத ஆரம்பித்தேன். இதற்கெல்லாம் சில ஆண்டுகள் பிடித்தது. தறியுடன் நாவலுக்கு முதலில் நான் வைத்த பெயர் ‘தீப்பொறியாய் தறிகள்’ ஆனால், நாவலை தட்டச்சில் படித்த ஒரு சிலரில் தட்டச்சுக்காரரான ஜாபர்சாதிக் நாவலின் பெயரை மாற்றச் சொன்னார். அது சரியெனப் படவே  வேறு ஒரு நண்பரிடம்  பேச அவரும் தலைப்பை மாற்றச் சொன்னார். ஆனால், நாவலுக்கு முன்னுரை எழுதிய தோழர் கோவை ஈஸ்வரனுக்கு தலைப்பை மாற்றுவதில் உடன்பாடு இல்லை. பதிப்பாளர் திருப்பூர் குணாவும் பெயர் மாற்றைத்தை வலியுறுத்திச் சொல்ல  ‘தறியுடன்..’ என பெயர் மாறியது. அந்த நாவல் என் கையெழுத்தில் 1047 பக்கம் வந்தது. அது புத்தக வடிவில் வரும் போது மூன்றில் ஒரு பகுதிதான் வருமென நினைத்திருந்தேன். ஆனால், 780 பக்கம் வந்த போதுதான் என் கையெழுத்து  எவ்வளவு சின்னதென்று தெரிந்தது.  பெரிய நாவலாய் இருந்தாலும் வெளியிட்ட பின் அதை யாரும் பொருட்டாக சொல்லாதது ஆறுதலாய் இருந்தது.

ஞாயிறு, 29 மே, 2016

நேற்று சென்னை இக்சா அரங்கில் வாசகசாலை அமைப்பின் சார்பாய் முழுநாள் இலக்கிய கருத்தரங்கு நடந்தது. இதில், நான்காம் அமர்வாய் ‘அரசியல் நாவல்கள்’ என்ற தலைப்பில் பேச நண்பர்கள் அழைத்திருந்தார்கள். மதிய நேரத்துக்கு மேல் தான் நான் பேசும் அரங்கு என்றாலும், காலையில் முதல் அமர்வுக்கே  சென்று விட்டேன். மற்ற அரங்குகளில், என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். முதல் அமர்வில், தமிழ் நாவல்கள் சினிமாவில் எப்படிப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதன் சாதக பாதகங்கள் பற்றி அலசப்பட்டது. இயக்குனர் கரு. பழனியப்பனும் அதில், கலந்துக் கொண்டு பேசினார். முதலில் பேசிய கவிஞர் சாம்ராஜ்  தமிழ் நாவல்கள் திரைப்படங்களாய் மாறும் போது பெரும்பாலும் அரை குறையாய் தான் முடிகின்றன என்று சில நாவல்களையும் அது திரைப்படமாய் மாறிய போது எப்படி இருந்தன? என்று அலசினார். குறிப்பாய் மோகமுள் நாவலுக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்தார். அடுத்துப் பேசிய சுபகுணராஜன் நாவல்களை திரைப்படமாக்கும் கலையில் இயக்குனர் மகேந்திரனின் நேர்த்தியைப் பாராட்டினார். முள்ளும் மலரும் நாவல் திரையில் இன்னும் சிறப்பாய் வந்துள்ளதை எடுத்துச் சொன்னார். புதுமைப் பித்தனின் சிற்றன்னை சிறுகதை படமாக்கப்பட்டது மிகச் சிறப்பு என்று கூறினார். பிரபாகரன் அடுத்துப் பேச முடிவில் கரு. பழனியப்பன் சினிமாக்காரர்களிடம் இலக்கியத்தை நோக்கி நகரும் தன்மை தற்போது இல்லை. இலக்கியவாதிகள் திரைப்படத்தை நேக்கி வாருங்கள் என்று கூறினார். இந்த அமர்வில், எனக்கிருந்த விமர்சனம்  கம்யூனிச எழுத்தாளர்களின் நாவல்களும் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் சுட்டவில்லை. குறிப்பாய் டி.செல்வராஜ் எழுதிய தேநீர் நாவலைப் பற்றியும், அது குடிசை ஜெயபாரதி இயக்கத்தில் வெளி வந்தது பற்றியும் எவரும் சொல்லவில்லை.

அடுத்த அமர்வாய் அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி மற்றும் கவிஞர் உமாதேவி ஆகியோர் ஒரு கலந்துரையாடலாய் தற்காலப் பிரச்னைகளை  கவிஞர்கள், எழுத்தாளர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் ஏன் தொடுவதில்லை? என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நான் எந்தந்த விசயங்கள் எங்கே தொடப்பட்டிருக்கிறது அதன் படைப்பாளி யார்? என்பதைச் சொன்னேன். குறிப்பாய், குட்டி  ரேவதி கூடங்குளம் அணு உலை பிரச்னைப் பற்றி கவிதை எழுதியது குறித்துப் பேசப்பட்ட சமயத்தில் இடிந்தக்கரை  சுந்தரி என்ற பெண் போராளி கூடங்குளம் போராட்டத்தில் தான் பட்ட அனுபவத்தை நாவலாய் வடித்திருக்கிறார் என்பதை எடுத்துச் சொன்னேன். நண்பர்கள் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி. உணவு இடைவேளைக்குப் பின், மூன்றாம் அமர்வாய் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள் உரையாற்றினார். அவரிடம் பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அவரது பதிலில் சில தகவல்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது. குறிப்பாய் சிறு துறைமுகங்கள் பற்றி அவர் சொன்ன செய்தியில் பெரு துறைமுகங்கள் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு தோதாய் இல்லை என்பதும், மத்திய அரசுகள் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாய் இல்லை என்பதும் அறிய முடிந்தது. ஆனால், இந்துத்துவாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இப்போது நினைத்தாலும் பயந்து வருகிறது. அதாவது இந்துத்துவா என்பது பக்குவமாம்.

நான்காவது அமர்வாய் அரசியல் நாவல்களைப் பற்றி முதலில் நான் பேசினேன்.  அதில், அரசியலற்ற நாவல்க என்று எதுவும் இல்லை அப்படி சொல்லும் நாவல்கள் எதுவாய் இருந்தாலும் அவற்றில் நிச்சயமாய் அரசியல் இருக்கும் என்று பேசினேன். எழுத்து என்பது மக்களின் பிரச்னையை சொல்வதாய் இருக்க வேண்டும் என்றும், அது தீர்வை நோக்கிய முன் நகர்த்தலாய் இருப்பது இன்னும் சிறப்பு என்றும் கூறினேன். மக்களின் போராட்டங்களை சொல்லும் நினைவுகள் அழிவதில்லை, தோல், பஞ்சும் பசியும், கீழைத் தீ போன்றவற்றை குறிப்பிட்டு விட்டு இறுதியாய், எனது தறியுடன் மற்றும் வந்தேறிகள் நாவல்களைப் பற்றிப் பேசினேன். நக்சல்பாரி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினேன். ஒரு அரசியல் கருத்தரங்கு போல இருந்தது என்றே பார்வையாளர்கள் கூறினார்கள். எனக்கு அடுத்துப் பேசிய அரவிந்தன் புளியமரத்தின் கதை, ரப்பர் போன்ற வேறு சில நாவல்களைப் பற்றி பேசினார். ஜெயமோகனை அவர் புகழ்ந்த விதம் ஏற்புடையதாய் இல்லை.

இறுதி அமர்வாய் இயக்குனர் பா.ரஞ்சித் உரை நிகழ்த்தும் போது மாலை ஆறு மணியாகி விட்டது. எனக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் பேரவையின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நேரமாகி விட்டதால் அவரிடம் விடைப் பெற்றேன். வேறு நிகழ்ச்சியில் அவர் உரையை கேட்க நேரும் என்று நினைக்கிறேன்.

பொதுவாய் இது போன்ற இலக்கிய நிகழ்வுகளை நடத்தும் நண்பர்கள் தங்களது உழைப்பில் செலவிட்டுதான் நடத்துகிறார்கள். இதற்கென அவர்கள் படும் சிரமத்தை புரிந்துக் கொள்ள இந்த நிகழ்வு வாய்ப்பாய் அமைந்தது. மதிய உணவு நன்றாய் இருந்தது. வாசகசாலை கார்த்திகேயன் வெங்கட்ராமன், த. ராஜன் இன்னும் பெயர் தெரியாத நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

புதன், 25 மே, 2016

கேரளத்தில் உள்ள மலையாளிக் கவுண்டர்கள் மற்றும் நரிக்குறவர்கள் உள்ளிட்ட எளிய மக்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் மத்திய அரசு சேர்த்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது தான். அந்த மக்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பது சரியானதே. ஆனால், இவற்றைச் செய்யும் மத்திய அரசை இன்னொரு கோணத்தில் நாம பார்க்க வேண்டியுள்ளது. ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பழங்குடியினர் நலனில்  இதே மத்திய அரசு என்ன நிலை எடுத்து வருகிறது? கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கு துணை நிற்கிறது. இதுதான் உண்மையில், பழங்குடியினர் நலனில் மத்திய அரசு காட்டும் அக்கறையா? அங்கே, துணை ராணுவத்தை வைத்துக் கொண்டு அப்பாவி வனவாசி மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப் பார்க்கிறது. பழங்குடியின மக்கள் தங்களுக்கு எதிரான நிறுவனங்களை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களை ஆயுத முனையில் நசுக்குகிறது அரசாங்கம். வேறு வழியில்லாமல் மரபு வழி ஆயுதம் ஏந்தும் மக்களை ‘மாவோயிஸ்ட்கள்’ என்று முத்திரை முத்துகிறது. முன்னணியினர் பலரைக் கைது செய்து சிறையில் வருடக்கணக்கில் அடைக்கிறது. இதெல்லாம் தான் மத்திய அரசின் பழங்குடியினர் நலனா? கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசு. அதை பழங்குடியினர் செங்குருதியில் அல்லவா செய்கிறது. எனவே, ஏதோ சில சலுகைகளை எளிய மக்களுக்கு கொடுத்து விட்டு தனது கனிம வளக் கொள்ளையின் ஆதரவு நிலையை மக்களின் கண்களில் மண் தூவி மறைக்கப் பார்க்கிறது. தீவிரவாத ஒழிப்புப் பிரிவு எனும் சீருடைப் படையை வைத்துக் கொண்டு அங்கே மத்திய மாநில அரசுகள் செய்யும் கொடுமைகள் கொஞ்சமா? நஞ்சமா? பழங்குடியினப் பெண்களில் பலர் அதிலும், இள வயதுப் பெண்கள் தங்கள் மண் காக்க ஆயுதம் ஏந்துகிறார்கள் என்று தெரிந்துக் கொண்ட சீருடைப் பட, திருமண ஆகாத பெண்களை தங்கள் முகாம்களுக்கு கொண்டு சென்று சித்ரவதை செய்கிறார்கள். இதனால், அங்கே சிறுவயது திருமணங்கள் அதிகம் நடப்பதாய் கூறப்படுகிறது. பெண்களின் மார்பகங்களில் பால் சுரக்கிறதா? அவர்கள் திருமணம் ஆகி குழந்தைப் பெற்றவர்கள் தானா? என்று சோதிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது மத்திய அரசின் ஆயுதப்படை. இதெல்லாம் எதற்காக மலைவாழ் மக்களை விரட்டி விட்டு அவர்களின் கனிம வளத்தைக் கொள்ளையடிக்கத்தானே. அப்புறம், எங்கிருந்து வந்தது மத்திய அரசின் எளிய மக்கள் பற்றிய அக்கறை?

எழுத்தாளர் பாரதிநாதன்:

எழுத்தாளர் பாரதிநாதன்:

விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாய் தரப் போவதாய் ஆட்சிக்கு வந்திருக்கிறது அதிமுக அரசு. உண்மையில் இந்த இலவசத்தால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்களுக்கு பெரிதாய் நன்மையில்லை. ஏனெனில், மின்சாரத் தட்டுப்பாடு நிலவும் இந்த கோடைக் காலத்தில் மின் கட்டணத்தையே ரத்து செய்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்த இலவசம் வாக்காளர்களை கவர தேர்தல் காலத்து கவர்ச்சி அறிவிப்பே தவிர, உண்மையில் காலாவதியான ஒன்றே. வெளியில் இருந்துப் பார்க்கும் பலருக்கும் ஏதோ முதல்வர் விசைத்தறியை வாழ வைத்து விட்டார் என்று வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், வெறும் கண் துடைப்பே இந்த 750 யூனிட மின்சாரம் என்பது. இதற்குப் பதிலாய் உண்மையில் இந்த அரசு விசைத்தறியாளர்கள் மீது அக்கறைக் கொண்டிருந்தால், சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே  தயாரித்து உபயோகப் படுத்துவதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரலாம். இதற்கு மத்திய அரசு மான்யமாய் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறது. அதைக் கேட்டுப் பெற மாநில அரசு முயற்சி செய்யலாம். இதனால், அரசு தரும் மின்சாரத்தை சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் நம்பி இருக்கத் தேவையில்லை. அரசாங்கம் அதிக விலைக் கொடுத்து மின்சாரத்தை வெளியாரிடமிருந்து வாங்கவும் தேவையில்லை. ஏற்கனவே மின் வாரியம் பல கோடி இழப்பில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக மக்களின் கடன் சுமையை குறைக்கும் முயற்சியில் இறங்கலாம். இதைத் தான் விசைத்தறியாளர்களும் விரும்புகிறார்கள். அடுத்து கைத்தறிக்கு வாரியம் அமைத்து கூட்டுறவு சங்கங்களில் ஜவுளிக் கொள்முதல் செய்வது போலவே, விசைத்தறி துணிகளையும் கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்கள் இன்றைக்கு தேவையாய் இருக்கிறது. அப்படி அரசு செய்யுமானால் அதுதான் உண்மையான அக்கறையாய் இருக்க முடியும். தமிழகத்தின் மேற்கு மண்டலங்களில் ஜவுளிப் பூங்காக்கள் செயல்படுகிறது. அவற்றில் ஜெட்லூம் எனப்படும் நவீன விசைத்தறிகள் இயங்குகிறது. இஅவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தரப்படுகிறது. இந்த முறையை மாற்றி பீஸ் ரேட் எனப்படும் நெய்யப்படும் துணிகளின் நீளத்திற்கேற்ற சம்பளம் தரப்பட வேண்டும். அப்போதுதான் ஓரளவாவது உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும். மேற்கு மாவட்டங்களுக்குத்தான் இந்த முறை அதிமுக மந்திரி சபையில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமான விசைத்தறி தொழிலில் உள்ள இடையூறுகளைக் களைய முயல வேண்டும். செய்வார்களா?

செவ்வாய், 24 மே, 2016

எழுத்தாளர் பாரதிநாதன்:

எழுத்தாளர் பாரதிநாதன்: கடந்த முறை போல் அல்லாது இந்த தேர்தல் பரபரப்பாய் இருந்தது.

எழுத்தாளர் பாரதிநாதன்:

எழுத்தாளர் பாரதிநாதன்:

கடந்த முறை போலல்லாது இந்த முறை 2016 தேர்தல் பரபரப்புக்குள்ளாது.

எழுத்தாளர் பாரதிநாதன்: எழுத்தாளர் பாரதிநாதன்: எழுத்தாளர் பாரதிநாதன்:

எழுத்தாளர் பாரதிநாதன் தமிழக தேர்தல் களம் 2016 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை சற்ற...

எழுத்தாளர் பாரதிநாதன்: எழுத்தாளர் பாரதிநாதன்: எழுத்தாளர் பாரதிநாதன்:

எழுத்தாளர் பாரதிநாதன் தமிழக தேர்தல் களம் 2016 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை சற்ற...

எழுத்தாளர் பாரதிநாதன்: எழுத்தாளர் பாரதிநாதன்:

எழுத்தாளர் பாரதிநாதன்: எழுத்தாளர் பாரதிநாதன்:: எழுத்தாளர் பாரதிநாதன்

தமிழக தேர்தல் களம் 2016 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை சற்று பரபரப்புக்குள்ளானது.

எழுத்தாளர் பாரதிநாதன்:

எழுத்தாளர் பாரதிநாதன்: