திங்கள், 20 ஜூன், 2016

அரசியல், கலை இலக்கியம் என்று தொடர்ந்து எழுதி வரும் தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் ‘மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு’ புத்தகம் படிக்க நேர்ந்தது. மொத்தம் இருபத்தி எட்டு கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் பல விடயங்களை தனக்கே உரித்த பாணியில் அலசியிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவரது தொடக்க கால மார்க்சிய அரசியல் தொடர்புகள் பற்றிய கட்டுரைக்குதான் ‘மணல் மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு’ என்று தலைப்பிட்டிருக்கிறார். அதுவே, புத்தகத்தின் தலைப்பாய் மாறியிருக்கிறது. அதை ஏன் மணல் மேடாய் கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அவரின் இன்றைய எழுத்துச் செயல்பாட்டுக்கு அதுதானே அஸ்திவாரம்.

அதில். கோவை ஞானி, எல். அப்பு, எஸ்.வி ஆர், கண்ணாக்குட்டி, எஸ்.என் நாகராசன் போன்றவர்களின் செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்த அனுபவங்களை எழுதுகிறார். அதே சமயம் அவரது தந்தையாரின் மார்க்சிய அரசியல் ஊடான நிகழ்வுகளையும் அடிக் கோடிடுகிறார். அதனால் தான் சொன்னேன் மணல் மேடு அல்ல, பண்பட்ட நிலம் தான் அவருடைய தொடக்க காலம் என்று. ஆனால், அடிக்கடி நக்சலிசம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அப்படியொரு இசம் எனக்குத் தெரிந்து இல்லை. நக்சல்பாரி இயக்கத்தில் சில ஆண்டுகள் முழுநேர ஊழியனாய் பணியாற்றியவன் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். அதே சமயம் கோவை ஞானியைப் பற்றிய அவரது விமர்சனம் நேர்த்தி. கா. சிவத்தம்பி பற்றிய கட்டுரையில் அவரது மதிப்பீடும் நன்று. ஒரு  இலக்கிய செயல்பாட்டாளன் குறைகளுடன் ஏற்றுக் கொள்ளத் தக்கவன். அவன் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியாய் இல்லாதவரை. தோழர் யமுனா ராஜேந்திரன் கா. சிவத்தம்பியோடு நிறுத்திக் கொள்ளாமல் கைலாசபதி, ஏ.ஜே கனகரட்ணா, நந்தினி சேவியர் போன்ற மார்க்சிய இலக்கிய ஆளுமைகள் பற்றியும் எழுதலாம். அவரது மற்ற புத்தகங்களில் எழுதியுள்ளாரா? என தெரியவில்லை.

ருஸ்டிக்கும், அருந்ததிராய்க்கும் உள்ள வேறுபாடுகள் குறித்துச் சொல்லும் கட்டுரை நன்று. அருந்ததிராய் எனும் ஆளுமை எனும் கட்டுரையில் அவரது நிறைகளை சிலாகிக்கும் போது அடிப்படையில் அவர் நூதன மார்க்சிய எதிர்ப்பாளராய் இருப்பதை இன்னும் அழுத்தமாய் கூறி இருக்கலாமோ? என தோன்றுகிறது. சத்திய சோதனையின் மீதான வல்லுறவு என்ற கட்டுரை மிகச் சிறப்பு. ஸ்டாலினைப் பற்றிய உங்களது பார்வையில் அவரது எதிர்ப்பாளர்களையே நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் தோழர் யமுனா ராஜேந்திரன். [இலக்கிய இந்துத்துவம்: இடி முழக்கம் மற்றும் கள்ள மௌனம்] பக்கம் 118 ல்  “எனது எழுத்துக்களிலிருந்து ஸ்டாலினிய ஆதரவு தொடர்பான எந்தக் கருத்துக்களையும் அவர்களால் தலை கீழாக நின்றாலும் சுட்டிக் காட்ட முடியாது” என்று நீங்களே கூறுகிறீர்கள். தோழர் ஸ்டாலினைப் பற்றிய புத்தகங்கள் தமிழிலேயே இரண்டு மிகச் சிறப்பாய் வந்திருக்கின்றன.

 ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்- எம். ஆர் அப்பன்
ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் - குரோவர் ஃபர் [தமிழில் செ.நடேசன்]

என்னைப் போன்ற தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இவை வரப்பிரசாதம். உங்களைப் போன்ற ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கு இன்னும் ஸ்டாலின் பற்றிய உண்மைகள் அறிய வாய்ப்பு அதிகம்.

தோழர் மாவோவின் ஸ்டாலின் பற்றிய வரையறை இன்றும் உயிருடன் உள்ளது என்பது என் கருத்து. மற்றபடி, போர்னோகிராபி இலக்கிய உலகம்- பீடபைல் கட்டுரை தமிழுக்கு புதிது. அருமை. ஜெயகாந்தனைப் பற்றிய இரு கட்டுரைகளும் அப்படியே.

ஸ்ரீவித்யா பற்றிய கட்டுரையில் அவர் மீது அனுதாபம் கொள்ள வைக்கிறீர்கள். ஆனால், அவரது சமூகப் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழுகிறது. அவரோடு ஒப்பிடும் போது சில்க் சுமிதா சிறிய அளவிலேனும் மற்றவர்களுக்கு குறிப்பாய் திரைத்துறையில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களிடம் அன்பு காட்டி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார் என கேள்விப்பட்டுள்ளேன்.
இந்த நேரத்தில், ஆந்திர மாநிலத்தில் நடிகை சிநேகலதா போன்றவர்கள் நக்சல்பாரி இயக்கங்களுக்கு வெளிப்படையாய் உதவி அதன் காரணமாய் கொல்லப்பட்டார்கள் என்பதையும் நினைவு கூர்கிறேன்.

நிற்க. சில்க் சுமிதா நடித்த வண்டிச்சக்கரம் படத்திற்கு வினு சக்ரவர்த்தி கதாசிரியர் மட்டுந்தான். இயக்கம் கே. விஜயன் என்று அறிகிறேன்.

உங்களது கட்டுரைகளில் தொனிக்கும் இந்துத்துவா எதிர்ப்புக்கு என செவ்வணக்கங்கள்.


வியாழன், 16 ஜூன், 2016

ஈழத்தைச் சேர்ந்த தோழர் நந்தினி சேவியர் சமீபமாகத்தான் எனக்கு அறிமுகம். அதிலும், என்னுடைய ‘தறியுடன்...’ நாவலை அவர் படித்தப் பின்னால்,  அதன் பின்னட்டையில் இருந்த ஒரு பத்தியை அவர் முகநூலில் பதிவிட்ட பின்புதான் தெரிந்தது அவர் யார் என்று. அரை நூற்றாண்டுகளாய் ஈழத்தில் முற்போக்கு இலக்கிய ஆளுமையாய் இருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றி தற்போது தான் தெரிய வந்திருக்கிறது என்றால், அது என் தேடலின் குறை என்று தான் கூற முடியும். 2016 புத்தகக் காட்சியில் விடியல் அரங்கில் அவரது ‘நந்தினி சேவியர் படைப்புகள்’ ஒரே புத்தகமாய் எனக்குக் கிடைத்தது. இயல்பிலேயே மிக நிதானமான வாசிப்புப் பழக்கத்தைக் கொண்ட எனக்கு அவருடைய புத்தகத்தை ஒரே நாளில் படிக்க முடிந்தது ஆச்சரியந்தான். அதற்கு காரணம் அதிலிருந்த எளிமையா அல்லது மனதுக்கு நெருக்கமான எழுத்துக்களா என்பதை பகுத்துணர்வது சிரமம் தான்.

முதலில், நான் வாசித்த அவரது சிறுகதைகளில் பலவும் தெளிந்த நடையுடனும், சிறப்பான உள்ளடக்கத்துடனும் இருந்தன. அநாவசிய வர்ணனைகள் இன்றி பளிச்சென்ற விதத்தில் அவை இருக்கின்றன என்று கூறினால் மிகையல்ல. ‘தொலந்துப் போனவர்கள்’ சிறுகதையில் இன உரிமைப் போரினால் எதிரிகளால் சிதைக்கப்பட்ட அந்த நகரம் மனதை விட்டு அகலவில்லை. ஏதோ நானே அந்த நகரத்தில் வசித்து தொலைந்துப் போனவர்களில் ஒருவனாய் மாறி விட்டதாய் தோற்றம். மானுடம் யுத்தக் களங்களில் எப்படியெல்லாம் தோற்கடிக்கப்படுகிறது என்பதை நினைக்கும் போது நீண்ட பெருமூச்சொன்று எழுகிறது.

‘வேட்டை’ சிறுகதையில் ஒரு வளர்ப்புப் பிராணியான நாய்க்கும், அந்த தம்பர் தாத்தாவுக்குமான உறவு அற்புதமானது. ‘வெள்ளையா... அதுக்குள்ளான் கிடக்கு... விட்டிடாதை... எழுப்படா... ‘ என அவர் தன் வேட்டை நாயை இரைக்காக உசுப்பும் போது, அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இறுதியில் வெள்ளையனின் மரணம் மனதைக் கனக்கச் செய்கிறது.
  ‘அயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்” சிறுகதை ஒரு சமூகப் பார்வையின் பால் எழுதப்பட்ட அருமையான கதை. ஒரு சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும், அதற்கான தீர்வும் சொல்லப்பட்டிருப்பது அழகு.
  ‘ஒரு பகற் பொழுது’ சிறுகதை சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் மனப்பாங்கு பற்றிய பண்பாட்டைச் சொல்கிறது. அதுவும் அருமை.

தோழர் தனது மாவோ சிந்தனையாற்றலை தனது கட்டுரைகள் வாயிலாய் விவரிக்கிறார். அதனூடே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான விதம் பற்றிக் கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அமரர் பா.ஜீவானந்தம் அவர்களே மார்க்சிய தொடர்புகளுக்கு காரணம் என அறியும் போது, தோழர் ஜீவாவை எண்ணி மனம் பெருமைக் கொள்கிறது. டானியல், டொமினிக் ஜீவா, போன்றோர் அவரால் வென்றெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் பின், ஏஜே கனகரட்ணா, கைலாசபதி, என்.கே ரகுநாதன், சிவத்தம்பி, எஸ் பொ என்றழைக்கப்படும் பொன்னுதுரை, செ, கணேசலிங்கன் போன்ற முற்போக்குப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பை உணர முடிகிறது.

தோழர் நந்தினி சேவியர் அவர்கள் வெறும் எழுத்தாளராய் மட்டும் இல்லாமல் அறுபதுகளிலேயே தீண்டாமை ஒழிப்பில் இயக்கம் சார்ந்து போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார். அவர் தலித் எழுத்தாளர் மட்டுமல்ல, சாதி ஒழிப்பை மாவோ சிந்தனை வாயிலாய் தான் நிறைவேற்ற முடியும் என்பதை விஞ்ஞானப் பூர்வமாய் உணர்ந்திருக்கிறார். ஆகவே, தன்னை இடதுசாரி எழுத்தாளன் என்று கூறுவதையே அவர் விரும்புகிறார்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாய் இலங்கையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் இருந்தாலும் அவற்றின் பிரதிநிதிகளாய் நிறைய அரசியல் தலைவர்கள் வெளிப்பட்டாலும், தோழர் சண்முகதாசனை பெருமையாய் நினைவு கூர்கிறார். ஈழத்துத் தந்தை என நமக்கு சொல்லப்பட்டவர்களெல்லாம் எவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதிகளாய் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. 1980 க்குப் பிறகான இனப்போர் சூழல் இடதுசாரிகளுக்கு எத்தனை நெருக்கடியான காலமாய் இருந்ததை அறிய முடிகிறது. உண்மையான கம்யூனிஸ்ட்கள் இயக்கங்களின் குறுங்குழுவாதப் போக்கால் எப்படியெல்லாம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும், எஞ்சியவர்கள் ஏன் மௌனமாகிப்  போனார்கள் என்பதும் தோழர் நந்தினி சேவியர் வாயிலாய் தெரிய வருகிறது.  அவரது உள்ளக் குமுறலில் சொல்லப்படாத விடயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

தோழரின் வாழ்க்கையை அறியும் போது சமூக மாற்றத்தை விரும்பும்  படைப்பாளிகள் ஊக்கமுடன் தங்கள் பணியை தொடர உத்வேகமளிக்கிறது. ஆனால், தோழர் தன்னடக்கத்தோடு கூறுகிறார் “இளைய தலைமுறை என்னை வாழ்த்த வேண்டும். முதிய தலைமுறை என்னைப் புகழ வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை” என்று.

தோழர் நந்தினி சேவியரின் தொடர்பு என்னைப் பொறுத்தவரை பெருமை கூற வைக்கிறது.

வெள்ளி, 3 ஜூன், 2016

படிப்பு வாசனையற்ற எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நான். அப்பா என்னையாவது படிக்க வைக்க வேண்டும் என கருதவில்லை. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் என்னை நெசவு வேலையில் ஒத்தாசைக்கு வைத்துக் கொண்டார். ஆனால், எனக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அவரிடம் சொல்லியும் பயனில்லாமல் போய் விட்டது. எனவே, டீக் கடைகள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முடி திருத்தும் கடைகள் என் வாசக சாலைகள் ஆயின. அந்த சின்ன ஊரில் இருந்த நூலகத்தில் அவ்வப்போது பாலகுமாரன்,சுஜாதா படிப்பதுண்டு. வீட்டுக்கெல்லாம் புத்தகங்கள் எடுத்து வர இயலாது. ‘என்னடா படிப்பு’ என திட்டு விழும். வளர்ந்த பிறகு, அப்பாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டு அதே ஊரில் தனியாக வசித்த சமயத்தில் தான் நக்சல்பாரி இயக்கத் தொடர்பு கிடைத்தது. அதுதான், எனக்கு படிப்பதில் ஒரு ஒளிமயமான வாசலை திறந்து விட்டது. மார்க்சிய புத்தகங்கள் அறிமுகமாயின. அதில், முதலில் நான் படித்த புத்தகம் ஜார்ஜ் பொலிட்சரின் ‘மார்க்சிய மெய்ஞானம்’ புரிந்துக் கொள்ள சிரமமாய் இருந்தது என்றாலும், விடா முயற்சியும் சக தோழர்களில் ஒத்துழைப்பும் இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை கற்றுத் தந்தது. கூலி விலை லாபம், என்ன செய்ய வேண்டும், நாட்டுப் புற ஏழை மக்களுக்கு என வெறிப் பிடித்தது போல படித்தேன். பிறகு, வால்கா முதல் கங்கை வரை, பொதுவுடமைதான் என்ன? போன்ற ராகுல்ஜியின் புத்தகங்களைப் படித்தேன். தாய், வீரம் விளைந்தது, அதிகாலையின் அமைதியில் போன்ற சோவியத் நாவல்கள் படித்தேன். கொஞ்ச நாட்களில், விசைத்தறிப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு  தலைமறைவாய் இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் இரவெல்லாம் படிப்பு. பகலில் இயக்க வேலை என போய்க் கொண்டிருந்தது. அப்போது தோழர் மாவோவின் புத்தகங்கள் சிலவற்றை இயக்கத் தோழர்கள் கொண்டு வந்துக் கொடுத்தார்கள். அவை இலங்கை தோழர்கள் மொழி பெயர்த்தவை. அது சோவியத்தும், சீனமும் முரண்பட்டிருந்த நேரம். லெனின் புத்தகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக் கடையில் சேலத்தில் கிடைக்கும். ஆனால், மாவோ புத்தகங்கள் அங்கெல்லாம் இருக்காது. இப்படி தோழர்கள் கொண்டு வந்துக் கொடுத்தால் தான் உண்டு. அதன் பிறகுதான் தோழர் ஸ்டாலின் எழுதிய புத்தகங்கள் ஒன்றிரண்டு கிடைத்தது. அவரது புத்தகங்களில் இன்றளவும் எனக்கு மிக பிடித்தமான புத்தகம் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல் வாதமும்’ என்று சொன்னால் மிகையில்லை. தலைமறைவு காலம் முடிந்ததும் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே ஆயுள் தண்டனைக் கைதிகளாய் இருந்த தோழர்கள் திம்மகாளி, நாகரசம்பட்டி கோபால், ராதாகிருஷ்ணன் போன்றவர்களையும் தியாகுவின் மாமனார் லெனின் என்கிற ரங்கசாமியையும் சந்திக்க வேண்டி வந்தது. அவர்களில்,  தோழர் நாகரசம்பட்டி கோபால் எனக்கு மார்க்சிய இயக்கவியல் வகுப்பெடுத்தார். ஓரளவு நான் அவரிடம் தான் இயக்கவியல் பிழையின்றி கற்றுக் கொண்டேன். சிறை மீண்டு வந்ததும், இயக்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் எழுந்து இயங்க முடியாத சூழலுக்கு இட்டுச் சென்றது. அது மேலும் என்னைப் படிக்கத் தோன்றியது. இந்த சமயத்தில் நான் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழுவில் இருந்து கடுமையாய் முரண்பட்ட தோழர் தமிழரசன் தேசிய இன பிரச்னைகளை முன் வைத்தார். அதனால், அவர் தனி இயக்கம் காண வேண்டி வந்தது. அவர் என்னை ஊருக்கே வந்து சந்தித்து என் கவனத்தை தேசிய இனப் பிரச்னையின் பால் திருப்பினார். ஆனால், அடுத்த சில மாதங்களில் பொன்பரப்பியில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்டார். நானும் இயக்கத்தை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு, சற்றேரக் குறைய இருபது வருடங்கள் படிப்பதும், எழுதுவதும் நின்று போனது. வாழ்க்கையில் வெறுப்பு தலை தூக்கிய அந்த நேரத்தில், மார்க்சியத்திற்கான நம் பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழுந்தது. அப்போது தான் என் இயக்க வாழ்க்கையை எழுதினால் என்ன? என்று தோன்றியது. அதற்காக பல நாட்கள் தூக்கம் கெட்டேன். பல்வேறு யோசனைகள் எழுந்தன. அதில், இறுதியாய் தோன்றியது நாவல் வடிவில் இயக்க வாழ்க்கையை சொல்வது என்பதே சரியெனப் பட்டது. அதன் பின்னர், பல்வேறு நாவல்களை தேடிப் பிடித்துப் படித்தேன். அதில், என் மனதுக்குப் பிடித்த மொழி பெயர்ப்பு நாவலான ‘நினைவுகள் அழிவதில்லை’ என்னை செதுக்கியது எனச் சொல்லலாம். பஞ்சும், பசியும், மலரும் சருகும் உட்பட பல்வேறு நாவல்களைப் படித்தேன். தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் பலரது எழுத்துக்களை வாசித்து விட்டு, மீண்டும் ஒரு முறை மார்க்சிய நூல்களை படித்து விட்டுத்தான் தறியுடன் நாவல் எழுத ஆரம்பித்தேன். இதற்கெல்லாம் சில ஆண்டுகள் பிடித்தது. தறியுடன் நாவலுக்கு முதலில் நான் வைத்த பெயர் ‘தீப்பொறியாய் தறிகள்’ ஆனால், நாவலை தட்டச்சில் படித்த ஒரு சிலரில் தட்டச்சுக்காரரான ஜாபர்சாதிக் நாவலின் பெயரை மாற்றச் சொன்னார். அது சரியெனப் படவே  வேறு ஒரு நண்பரிடம்  பேச அவரும் தலைப்பை மாற்றச் சொன்னார். ஆனால், நாவலுக்கு முன்னுரை எழுதிய தோழர் கோவை ஈஸ்வரனுக்கு தலைப்பை மாற்றுவதில் உடன்பாடு இல்லை. பதிப்பாளர் திருப்பூர் குணாவும் பெயர் மாற்றைத்தை வலியுறுத்திச் சொல்ல  ‘தறியுடன்..’ என பெயர் மாறியது. அந்த நாவல் என் கையெழுத்தில் 1047 பக்கம் வந்தது. அது புத்தக வடிவில் வரும் போது மூன்றில் ஒரு பகுதிதான் வருமென நினைத்திருந்தேன். ஆனால், 780 பக்கம் வந்த போதுதான் என் கையெழுத்து  எவ்வளவு சின்னதென்று தெரிந்தது.  பெரிய நாவலாய் இருந்தாலும் வெளியிட்ட பின் அதை யாரும் பொருட்டாக சொல்லாதது ஆறுதலாய் இருந்தது.